பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு விழா ஏற்பாடுகள் தீவிரம்: சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதியில்லை
மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசி, இந்த ஆண்டு வரும் 25-ம் தேதி வருவதால் பெருமாள் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு விழாவுக்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
வைகுண்ட ஏகாதசியை ஒட்டி பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு, அதன் வழியாக தேவி, பூதேவியருடன் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். ஆண்டுதோறும் நடைபெறும் இந்த வைபவத்தில் பெருமாளை தரிசிப்பதற்காக அதிகாலை முதலே கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். ஆனால், இந்த ஆண்டு கரோனாஅச்சத்தால் விழா நடைபெறுமா என பக்தர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்தது
இந்நிலையில், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள வைகுண்ட பெருமாள், அஷ்டபுஜம் பெருமாள், ஸ்தலசயன பெருமாள், பாடலாத்ரி நரசிம்மர் கோயில் உள்ளிட்ட பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறக்கப்படும். அதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆனால், சொர்க்க வாசல் திறப்பு நாளில் கோயில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்த அனுமதியில்லை மற்றும் சுவாமி வீதியுலாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்று அச்சத்தால் மேற்கண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
