Published : 18 Dec 2020 08:32 PM
Last Updated : 18 Dec 2020 08:32 PM

7.5% சதவீத உள் ஒதுக்கீடு காத்திருப்பில் உள்ள 60 மாணவர்கள் பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: உயர் நீதிமன்றத்தில் அரசு பதில்

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில், தனியார் கல்லூரியில் இடம் கிடைத்தும் கட்டணம் செலுத்த முடியாததால் காத்திருப்போர் பட்டியலில் உள்ள 60 மாணவர்களுக்கு மறுகலந்தாய்வு நடத்தப்படும் என அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில், தனியார் கல்லூரியில் இடம் கிடைத்தும் கட்டணம் செலுத்த முடியாததால் கடலூரைச் சேர்ந்த மாணவிகள் தர்ஷினி, மற்றும் இலக்கியா ஆகியோர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே செலுத்தும் என நவம்பர் 20-ம் தேதி தமிழக அரசு அறிவித்தது.

இதையடுத்து, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்கும் என்ற அறிவிப்பை முன் தேதியிட்டு அமல்படுத்த கோரி மாணவிகள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, காத்திருப்போர் பட்டியலில் உள்ள 60 மாணவர்களுக்கு சேர்க்கை கிடைக்க ஏதுவாக கூடுதல் இடம் உருவாக்க முடியாது எனவும், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை தான் அணுக வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டிருந்தது.

அகில இந்திய ஒதுக்கீட்டில் தமிழகத்தில் இருந்து வழங்கப்பட்ட இடங்களில் 227 இடங்கள் மீண்டும் மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், அதில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் கிடைக்கும் 26 இடங்கள் கொண்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள மனுதாரர் உள்ளிட்ட 60 அரசு பள்ளி மாணவர்களுக்கு மறு கலந்தாய்வு நடத்தப்படும் என தெரிவித்தார்.

மேலும், இந்த 60 மாணவர்களுக்கும் சம வாய்ப்பு, தகுதி மற்றும் தரவரிசை பட்டியல் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும் என தமிழக அரசு தரப்பில் இன்று விளக்கமளிக்கப்பட்டது.

இதனை பதிவு செய்த நீதிபதி மாநில அரசுக்கு திருப்பி அளிக்கப்பட்ட அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான மறுகலந்தாய்வு நடைமுறையை மேற்கொள்ள வேண்டும், வழக்கு தொடர்ந்த மாணவிகளுக்கு மறு கலந்தாய்வில் முன்னுரிமை வழங்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஜனவரி 8 ஒத்திவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x