சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு கோரி வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு கோரி வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி
Updated on
1 min read

2021-ம் ஆண்டு நடத்த உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பை, சாதிவாரியாக நடத்த மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை இந்திய அரசியல் சாசனத்தின்படி, மனுவில் கோரியுள்ள கோரிக்கையை ஏற்க முடியாது எனக்கூறி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

2021-ம் ஆண்டு நடத்த உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பை, சாதிவாரியாக நடத்த மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி சென்னை வன்னியகுல சத்ரிய மகாஜன சங்கம் சார்பில் அதன் பொருளாளரும், வழக்கறிஞருமான ஆர்.ஆனந்தபாபு தாக்கல் செய்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் பொங்கியப்பன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இடஒதுக்கீடு நடைமுறையை முழுமையாக அமல்படுத்த சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டதாகவும் மனுதாரர் தனது வாதத்தில் குறிப்பிட்டார்.

மேலும், பல்வேறு சமுதாயங்களை சேர்ந்தவர்கள், தங்களது மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்க கோரி போராட்டங்கள் நடத்தி வருவதாகவும் குறிப்பிட்டார். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், சில அமைப்புகளால் தான் போராட்டங்கள் நடத்தப்படுவதாகவும், போராட்டங்களால் எதையும் அடைய முடியாது என்றும் குறிப்பிட்டனர்.

மேலும், சாதியில்லா சமுதாயத்தை நோக்கி பயணிக்கும் போது சாதிவாரி கணக்கெடுப்பு ஏன் நடத்த வேண்டும் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சாதிவாரியாக புள்ளிவிவரங்களை சேகரிக்க உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

இந்திய அரசியல் சாசனத்தின்படி, மனுவில் கோரியுள்ள கோரிக்கையை ஏற்க முடியாது எனக் கூறிய நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in