Last Updated : 17 Dec, 2020 07:38 PM

 

Published : 17 Dec 2020 07:38 PM
Last Updated : 17 Dec 2020 07:38 PM

கோவை பாப்பம்பட்டி அருகே சாலையோரம் அரியவகை மஞ்சள் தலை பாறு கழுகை மீட்ட கல்லூரி மாணவர்; இறக்கையில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்கு வனத்துறை சிகிச்சை

கோவை பாப்பம்பட்டி அருகே சாலையோரம் மீட்கப்பட்ட மஞ்சள் தலை பாறு கழுகின் இறக்கையில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்கு வனத்துறை சிகிச்சை அளித்து கண்காணித்து வருகிறது.

கோவை கவுண்டம்பாளையத்தை அடுத்த ஜி.என்.மில்ஸ் பகுதியில் உள்ள தனியார் கலை, அறிவியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு இளநிலை விலங்கியல் படித்து வரும் மாணவர் சி.விஜயகுமார், கடந்த 13-ம் தேதி பாப்பம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது சாலையின் குறுக்கே கழுகு போன்ற பறவை ஒன்று தரையில் நடந்து செல்வதைக் கவனித்துள்ளார். அருகே சென்று பார்த்தபோது அது மஞ்சள் தலை பாறு (Egyptian Vulture) என்பது தெரியவந்துள்ளது.

உடனடியாக, தனது துறையின் உதவிப் பேராசிரியர் ஆர்.வெங்கிடாசலத்திடம் தகவல் தெரிவித்துள்ளார். அவர் வாகனத்தை அனுப்பி பறவையைக் கல்லூரிக்கு எடுத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்துள்ளார். பின்னர், கழுகை வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இது தொடர்பாக வெங்கிடாசலம் கூறும்போது, "இறக்கையின் வலப்புறம் சிறிய அளவில் அடிபட்டு எலும்பு முறிவு இருந்ததால் அதனால் பறக்க முடியவில்லை. மற்ற பறவைகளைவிட பாறு கழுகுகள் அதிக உயரத்தில் பறக்கக்கூடியவை. பாறு கழுகுகளுக்கு நுகரும் திறனைவிட பார்வைத்திறன் அதிகம். இறந்த உயிரினங்களின் வாசத்தை வைத்து இவை இரையைக் கண்டுபிடிப்பதில்லை. மாறாக, மற்ற பறவைகளின் அசைவுகளை வைத்து வானில் இருந்து இறங்கி மாமிசத்தை உட்கொள்கின்றன.

எனவே, அடிபட்ட பாறு கழுகு இரைதேடி இறங்கி இருக்கலாம் அல்லது ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு இடம்பெயர்ந்து செல்லும் வழியில் அடிபட்டு, பறக்க முடியாமல் கீழே இறங்கி இருக்கலாம்.

இந்தவகை பாறு கழுகுகள் மரத்தில் கூடு கட்டாது. மலை முகடுகளில்தான் கூடு கட்டிக் குஞ்சு பொறிக்கும். கோவையில் பவானிசாகர் நீர்ப்பிடிப்புப் பகுதிகளை ஒட்டிய சிறுமுகை, நீலகிரி மாயாறு பள்ளத்தாக்கு பகுதிகளில் பாறு கழுகுகள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் உள்ளன.

கோவை மாவட்டத்தில் உள்ள மற்ற பகுதிகளில் பாறு கழுகளைக் காண்பது என்பது அரிதினும் அரிதான நிகழ்வு. குளிர்காலத்தில் பாறு கழுகள், பிற இன கழுகுகள் இடம்பெயரும் என்பதால் குப்பைக் கிடங்குகளில் கொட்டப்படும் கோழிக் கழிவுகள் போன்றவற்றை உண்பதற்காகவும் கழுகுகள் வருகின்றன.

எனவே, கோவையில் அதுபோன்ற இடங்களைக் கண்காணித்தால் பாறு கழுகுகளும், பிற இன கழுகுகளும் தென்பட வாய்ப்பு உள்ளது" என்றார்.

வனத்துறைக்குத் தகவல் தெரிவிக்கலாம்

வனத்துறையினர் கூறும்போது, "மஞ்சள் தலை பாறு கழுகுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை முடிந்து பறக்கும் நிலையை அடைந்தவுடன் பாதுகாப்பான வனப்பகுதியில் அது விடப்படும். இவ்வாறு அடிபட்டுள்ள பறவைகள், வன விலங்குகளை மீட்க வனத்துறையின் துரித மீட்புக் குழு (ஆர்ஆர்டி) செயல்பட்டு வருகிறது.

இக்குழுவினர் கோவை வனச்சரகத்தில் மட்டும் கடந்த ஜனவரி முதல் நவம்பர் வரை மயில்கள், பாம்புகள், பச்சைக் கிளிகள், புறாக்கள், ஆந்தைகள், குரங்குகள், புள்ளி மான்கள், கழுகுகள், காட்டுப்பன்றிகள் என 435 உயிரினங்களை மீட்டுள்ளனர்.

எனவே, கோவையில் வன உயிரினங்கள், பறவைகள் அடிபட்டு இருப்பதைக் கண்டால் பொதுமக்கள் 0422-2456922, 1800-42545456 என்ற எண்களில் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம்" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x