போலீஸார் ஊதியத்தை உயர்த்தக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க கெடு

போலீஸார் ஊதியத்தை உயர்த்தக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க கெடு
Updated on
1 min read

தமிழகத்தில் போலீஸாரின் ஊதியத்தை உயர்த்தக்கோரிய வழக்கில் நாளை மதியத்துக்குள் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.

கரூரைச் சேர்ந்த மாசிலாமணி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் போலீஸார் 24 மணி நேரமும் பணிபுரிகின்றனர். பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் போலீஸாருக்கு குறைவாகவே ஊதியம் வழங்கப்படுகிறது.

90 சதவீதமான போலீஸார் வெகு தொலைவுகளிலிருந்து பணிக்கு செல்கின்றனர். அவர்களுக்கு தற்போது வழங்கப்படும் ஊதியம் போதுமானதாக இல்லை. எனவே, தமிழக போலீஸாரின் ஊதியத்தை உயர்த்தவும், போலீஸாரின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது.

அப்போது நீதிபதிகள், தமிழகத்தில் போலீஸ்காரர்கள் என்னென்ன பிரச்சினைகளை சந்திக்கின்றனர்? போலீஸாருக்கு என்ன செய்ய அரசு திட்டமிட்டுள்ளது? என்ற கேள்விக்கு பதில் அளிப்பதில் என்ன பிரச்சினை. மற்ற துறையினர் போராட்டம் நடத்தி தங்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்கின்றனர்.

போலீஸார் போராட்டம் நடத்த முடியாது என்பதால் பதிலளிப்பதை தாமதம் செய்யலாமா? நாளை பிற்பகலுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.

தவறினால் உள்துறை செயலர், டிஜிபி ஆகியோர் காணொலி வழியாக ஆஜராக வேண்டும் என்று கூறி விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in