ஸ்மார்ட் சிட்டி பணியின்போது நெல்லை பேருந்து நிலையத்தில் கிடைத்தது 90% ஆற்று மணல்: உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆணையர் தகவல்

ஸ்மார்ட் சிட்டி பணியின்போது நெல்லை பேருந்து நிலையத்தில் கிடைத்தது 90% ஆற்று மணல்: உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆணையர் தகவல்
Updated on
1 min read

ஸ்மார்ட் சிட்டி பணியின் போது நெல்லை பேருந்து நிலையத்தில் அஸ்திவாரப் பள்ளத்தில் கிடைத்த மணல் 90 சதவீித ஆற்று மணல் என வழக்கறிஞர் ஆணையர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நெல்லையைச் சேர்ந்த சுடலைகண்ணு, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

நெல்லை பேருந்து நிலையத்தில் 2018-ல் ஸ்மார்ட் சிட்டி பணிகள் தொடங்கியது. அஸ்திவாரம் அமைக்க 30 அடியில் பள்ளம் தோண்டப்பட்டது. அந்த 30 அடி பள்ளத்தில் ஆற்று மணல் இருந்துள்ளது. அதை மாநகராட்சி அதிகாரிகள் சட்டவிரோதமாக விற்பனை செய்தனர்.

உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்ததும், மாநகராட்சி அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் உடந்தையுடன் மணலை குறைந்த விலைக்கு பொது ஏலம் விட்டு விற்றுள்ளனர். எனவே, அஸ்திவார பள்ளத்திலிருந்து எடுக்கப்பட்ட ஆற்று மணல், களி மண் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக சிறப்பு குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, வழக்கறிஞர் ஆணையர் ஆய்வுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர் ஆணையர் அறிக்கை தாக்கல் செய்தார்.

அதில், பேருந்து நிலைய அடித்தள பகுதியில் உள்ள மணல் 90 சதவீத ஆற்று மணல் எனக் கூறப்பட்டிருந்தது.

மாநகராட்சி வழக்கறிஞர் வாதிடுகையில், ஆழ்குழாய் அமைத்து ஆய்வுக்காக மணல் மாதிரி சேகரிக்கப்பட்டது. மணலில் பல்வேறு வகையான மணல் கலந்துள்ளது. அது கட்டுமானத்துக்கு உகந்தது அல்ல என்றார்.

இதையடுத்து, நெல்லை பேருந்து நிலைய அஸ்திவாரப் பள்ளத்தில் கிடைத்த மணல் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக நெல்லை மாவட்ட நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுத்தது? போலீஸார் எத்தனை வழக்கு பதிவு செய்துள்ளனர்? அந்த வழக்குகளில் தற்போதைய நிலை என்ன? என்பது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, தீர்ப்பு கூறுவதை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in