

சிதம்பரம் இளமையாக்கினார் கோயில் குளத்தின் தற்காலிக சுற்றுச்சுவர் உள்வாங்கியது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். முதல்வர் பார்வையிட்ட ஒரு வாரத்தில் மீண்டும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
சிதம்பரம் பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் கனமழையால் சிதம்பரம் இளமையாக்கினார் கோயில் எதிரில் உள்ள தெப்பக்குளம் இரண்டு பக்கத்தின் சுற்றுச்சுவர் உள்வாங்கி குளத்துக்குள் விழுந்தது. இதனால் அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகளும் உள்வாங்கும் அபாயம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, நகராட்சி நிர்வாகம் மேலும் மண்ணரிப்பு ஏற்படாதவாறு சவுக்கு கட்டைகளை அடித்து, மண் மூட்டைகளை அடுக்கி தற்காலிகமாக சுவர் போன்று ஏற்படுத்தி பாதுகாப்புகளைச் செய்திருந்தனர். இந்த நிலையில், கடந்த 8-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடலூர் மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட்டபோது இந்த இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த நிலையில் நேற்று (டிச.16) நள்ளிரவு முதல் சிதம்பரம் பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் இன்று (டிச.17) அதிகாலை மீண்டும் இளமையாக்கினார் கோயில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து மண்மூட்டை அடுக்கிய பகுதி உள்வாங்கியது. இதனால் குளத்திற்கு அருகில் நியாயவிலைக் கடை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையம் ஆகிய இரண்டு கட்டிடங்கள் உள்வாங்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
தற்போது, நகராட்சி நிர்வாகம் விரைந்து அந்தப் பகுதியில் சவுக்கு கட்டைகளை அடித்து மணல் மூட்டைகளை அடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
இந்தக் குளத்திற்கு வரும் வடிகால் சரியான முறையில் நகராட்சி அதிகாரிகள் பராமரிக்கவில்லை. இதனால், மழை தண்ணீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடும்போது குளத்திற்குச் சென்று மண் அரிப்பு ஏற்பட்டு இதுபோல உள்வாங்கியுள்ளது என்கின்றனர், இப்பகுதி மக்கள்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டு 8 நாட்களில் அந்தப் பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு சுற்றுச்சுவர் உள்வாங்கி இருப்பது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.