தமிழகத்தில் அரசாணைகள், சுற்றறிக்கை, கடிதங்கள் அனைத்தையும் தமிழில் தயாரித்து வெளியிட உத்தரவிடக் கோரிய மனு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்
சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்
Updated on
1 min read

தமிழகத்தில் அரசாணைகள், சுற்றறிக்கை, கடிதங்கள் அனைத்தையும் தமிழில் தயாரித்து வெளியிட உத்தரவிடக் கோரிய மனுவுக்குப் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த பழனி என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழகத்தில் முதல் மொழியாகத் தமிழையும், இரண்டாம் மொழியாக ஆங்கிலமும் என இரட்டை மொழிக் கொள்கை பின்பற்றப்பட்டபோதும், தொன்மையான தமிழ் மொழி, அரசு அதிகாரிகளால் புறக்கணிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

அரசின் உத்தரவுகள், அரசாணைகள், சுற்றறிக்கை, கடிதங்கள் ஆகியன ஆங்கிலத்திலேயே தயாரிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்படுவதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை உள்ளிட்ட அறிக்கைகள் தமிழில் தயாரிக்கப்பட்டு உறுப்பினர்களுக்கு வழங்கும் நிலையில், அதே நடைமுறையை அரசாணைகள், சுற்றறிக்கைகள், கடிதங்களைத் தயாரிக்கும்போது பின்பற்றுவதில் எந்தச் சிக்கலும் இல்லை என்றும் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழக டிஜிபி, காவல்துறை அதிகாரிகளுக்குப் பிறப்பித்த உத்தரவில், கடிதங்களைத் தமிழில் அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டுள்ளதையும் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பாக, தமிழக அரசுக்கு தான் அனுப்பிய மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால், தனது மனுவைப் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கை இன்று (டிச.17) விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் பொங்கியப்பன் அடங்கிய அமர்வு மனுவுக்கு மார்ச் 29-ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி தமிழக தலைமைச் செயலாளர், தமிழ் வளர்ச்சித் துறைச் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in