Published : 22 Oct 2015 09:12 AM
Last Updated : 22 Oct 2015 09:12 AM

தீபாவளி இனாம் வாங்கும் அரசு ஊழியர்கள்: லஞ்ச ஒழிப்புத் துறை தீவிர கண்காணிப்பு

தீபாவளி இனாம் வாங்கும் அரசு ஊழியர்களை கைது செய்ய லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

தீபாவளி பண்டிகையின்போது அரசு அதிகாரிகள் சிலர் நேரடியாகவோ தங்களுக்கு கீழே பணிபுரியும் ஊழியர்கள் மூலமாகவோ ‘தீபாவளி இனாம்’ என்ற பெயரில் பணம் அல்லது பரிசுப் பொருட்கள் (லஞ்சம்) வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவர்களை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் பொறி வைத்து கைது செய்து வருகின்றனர்.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 19 நாட்களே உள்ள நிலையில் வருவாய், காவல், நெடுஞ்சாலை, பொதுப்பணித் துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளைச் சேர்ந்த பல அதிகாரிகளும், ஊழியர்களும் தீபாவளி வசூலில் ஈடுபட தொடங்கியுள்ளனர். இது தொடர்பான புகார்கள் மாநில, மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்றுள்ளது. குறிப்பாக ஒப்பந்தக்காரர்கள் மற்றும் வர்த்தகர்களை மிரட்டி ஊழியர்கள் பணம் வாங்குவதாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து ‘தி இந்து’விடம் தேனி லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சிலர் கூறும்போது, “தீபாவளி இனாம் கேட்கும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பெயர், முகவரி பட்டியல் தயாரிக்கப் பட்டுள்ளது. அவர்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். பணம், பரிசுப் பொருட்கள் வாங்குவது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x