Published : 17 Dec 2020 10:15 AM
Last Updated : 17 Dec 2020 10:15 AM

ராமேசுவரம் அருகே கந்துவட்டி கொடுமையால் அரசு பள்ளி ஆசிரியர் தற்கொலை

ராமேசுவரம் அருகே அக்காள் மடத்தில் கந்துவட்டிக் கொடுமையால் அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். ராமேசுவரம் அருகே பாம்பன் ஊராட்சிக்கு உட்பட்ட அக்காள்மடத்தைச் சேர்ந்தவர் பூமாரியப்பன்(52). இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். இவர் தங்கச்சிமடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். குடும்ப சூழ்நிலையால் ஏற்பட்ட பொருளாதாரத் தேவை காரணமாக நீண்ட காலமாக வட்டி க்குப் பணம் பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பூமாரியப்பனின் மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டில் இருந்துள்ளனர்.

அப்போது, அங்கு வந்த 2 பேர் வட்டியும், முதலுமாக ரூ.50 லட்சத்துக்கும் மேல் தங்களுக்கு தர வேண்டும் எனக் கேட்டு மிரட்டல் விடுத்ததாகவும், அவதூறாகப் பேசியதாகவும் தெரிகிறது. இதுகுறித்து பூமாரியப்பனிடம் அவரது மனைவி கூறியுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த பூமாரியப்பன் நேற்று முன்தினம் இரவு வீட்டின் பின்புறத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

அவரது உடலை நேற்று காலை பாம்பன் போலீஸார் மீட்டு, உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கந்துவட்டி கேட்டு மிரட்டியதாக 2 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கந்துவட்டி கொடுமையால் அரசு பள்ளி ஆசிரியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x