Published : 17 Dec 2020 03:17 AM
Last Updated : 17 Dec 2020 03:17 AM

தமிழகத்தில் முகக்கவசம் அணியாமல் நடமாடிய 12 லட்சம் பேரிடம் ரூ.9 கோடி அபராதம் வசூல்: சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தகவல்

செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், முகக்கவசம் அணியாமல் இருந்த மூதாட்டிக்கு முகக்கவசம் அணிவித்தார்.

செங்கல்பட்டு

தமிழகத்தில் கரோனா தொற்று குறைந்து வருகிறது எனவும் முகக்கவசம் அணியாமல் நடமாடிய 12 லட்சம் பேரிடம் ரூ.9 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டு உள்ளது எனவும் சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்டார். பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பேருந்துகளில் அவர் ஏறி, முகக்கவசம் அணியாதிருந்த பயணிகளிடம் முகக்கவசம் வழங்கி முக்கவசத்தின் முக்கியத்துவத்தை விளக்கினார். பின்னர் அப்பகுதியில் கரோனா தாக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய அவர், பேருந்து நிலையத்தில் முகக்கவசம் அணியாதிருந்த ஒரு மூதாட்டிக்கு தன் கைகளாலேயே முகக்வசத்தை அணிவித்தார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, "தற்போது கரோனா தொற்றால் பாதிப்போர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இதற்கெல்லாம் பொதுமக்களின் முழு ஒத்துழைப்பே காரணம். பொதுமக்கள் முகக்கவசத்தை பொது இடங்களில் கழற்றுவதை தவிர்க்க வேண்டும். தமிழகத்தில் முகக்கவசம் அணியாமல் நடமாடிய 12 லட்சம் பேரிடம் இருந்து ரூ.9 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்றின் பாதிப்பு முழுமையாக குறையாத சூழலில் பொதுமக்களும், வியாபாரிகளும், வணிக நிறுவனங்களும் தொடர்ந்து அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x