தமிழ்நாடு சட்டப்பேரவைப் பொதுக் கணக்குக் குழு திருச்சியில் ஆய்வு; பதில் தெரியாவிட்டால் மழுப்பக் கூடாது: அரசு அதிகாரிகளுக்கு குழுத் தலைவர் துரைமுருகன் அறிவுறுத்தல்

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம்.
Updated on
1 min read

தமிழ்நாடு சட்டப்பேரவைப் பொதுக் கணக்குக் குழுவினர், குழுவின் தலைவரான துரைமுருகன் எம்எல்ஏ தலைமையில் அரசின் பல்வேறு திட்டங்களை ஆய்வு செய்ய திருச்சி மாவட்டத்துக்கு இன்று (டிச.16) வந்துள்ளனர்.

இதையொட்டி, முதலில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு முன்னிலையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் சட்டப்பேரவைச் செயலாளர் கே.சீனிவாசன் மற்றும் குழுவின் உறுப்பினர்களான எம்எல்ஏக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

கூட்டத்தைத் தொடங்கிவைத்து துரைமுருகன் பேசியதாவது:

"எந்தக் குழுவுக்கும் இல்லாத அதிகாரம் பொதுக் கணக்குக் குழுவுக்கு உண்டு. எந்தத் துறையின் அதிகாரிக்கும் சம்மன் அனுப்பும் அதிகாரம், தவறு செய்யும் அதிகாரிகளைப் பணி நீக்கம் செய்யும் அதிகாரம், அரசு அதிகாரியின் பதவி உயர்வை ரத்து செய்யும் அதிகாரம், அவர்களைச் சிறைக்கு அனுப்பும் அதிகாரம் ஆகியவை இந்தக் குழுவுக்கு இருக்கிறது.

செயலாளர் கேட்கும் கேள்விக்கு அதிகாரிகள் தெரிந்தால் பதில் கூறுங்கள். இல்லையெனில், தெரியாது என்று கூறிவிடுங்கள். மழுப்பலாக எதுவும் கூறி மாட்டிக்கொள்ள வேண்டாம்.

எனது அரசியல் வாழ்வில் பொதுப்பணி, நெடுஞ்சாலை, மின்சாரம் ஆகிய துறைகளின் அமைச்சராக இருந்துள்ளேன். கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்துள்ளேன். 14 ஆண்டு காலம் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தபோது யாரையும் பணியிடை நீக்கம் செய்தது கிடையாது. எனவே, நாங்கள் கேட்கும் கேள்விக்கு அதிகாரிகள் நேர்மையாக பதில் அளிக்க வேண்டும்".

இவ்வாறு துரைமுருகன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in