

சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்றாவது அணி நிச்சயம் அமையும். நல்லவர்களோடு இணைந்த மூன்றாவது அணி அமைப்போம் என்று மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
'சீரமைப்போம் தமிழகத்தை' எனும் பெயரில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் முதற்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார் கமல்ஹாசன்.
இந்த நிலையில் நெல்லையில் கமல்ஹாசன் பேசியதாவது,” தேர்தலில் மூன்றாவது அணி நிச்சயம் அமையும். நல்லவர்களோடு இணைந்த மூன்றாவது அணி அமைப்போம்.
ஓவைசியோடு கூட்டணி வைப்பது குறித்து இதுவரை எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. ரஜினியோடு கூட்டணி அமையும் பட்சத்தில் இருவரில் யார் முதல்வர் என்பதை பேசி முடிவெடுப்போம். சின்னம் முடக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நான்கைந்து நாட்களில் நீதிமன்றத்தை நாடுவோம். வரும் தேர்தலில் மக்கள் மாற்றத்தை நிகழ்த்துவார்கள் மக்கள் சக்தியை நம்பியே நாங்கள் களம் இறங்குகிறோம்.
எங்கள் கட்சி யாருக்கும் பி.டீம் அல்ல. நாங்கள் எப்போதும் எங்களுக்கு ஏ டீம் தான். தேர்தல் வாக்குறுதியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் இலவசமாக வழங்குவது உள்ளிட்டவைகள் இடம்பெறும்” என்று தெரிவித்துள்ளார்.