

வேளாண் சட்டத்தில் 3 முக்கிய திருத்தங்கள் செய்ய மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளோம் என பாரதிய கிசான் சங்கத்தின் தேசிய செயலாளர் பெருமாள் தெரிவித்தார்.
அச்சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் ஸ்ரீரங்கத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற பெருமாள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வேளாண் சட்டத்துக்கு வரவேற்பு
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை நாங்கள் வரவேற்கிறோம். இருப்பினும் அந்த சட்டத்தில் 3 திருத்தங்களை செய்ய மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளோம். இந்த வேளாண்மை சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது அல்ல என்பதை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துவோம்.
இந்த சட்டத்தின் மூலம் மண்டி மற்றும் இடைத்தரகர்கள் அனைவரும் முழுமையாக அகற்றப்பட்டு விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களுக்கு நியாயமான விலையை அவர்களே நிர்ணயம் செய்ய நல்ல வாய்ப்பு ஏற்படும்.
விவசாயிகளின் விருப்பம்
கார்ப்பரேட் நிறுவனங்கள் எந்த விவசாயியையும் கட்டாயப்படுத்தி அவர்களோடு ஒப்பந்தம் செய்து கொள்ளப்போவதில்லை. விவசாயிகள் விரும்பினால் மட்டுமே இந்த ஒப்பந்தங்களை மேற்கொள்ள முடியும்.
எனவே பாரதிய கிசான் சங்கம் டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் எங்கள் தரப்பில் உள்ள கோரிக்கைகளை முன்பு வைத்துள்ளோம் என்றார்.
பேட்டியின் போது, மாநிலத் தலைவர் ஆர்.சுந்தரராஜன், மாநில பொதுச் செயலாளர் என்.எஸ்.பார்த்தசாரதி, மாநில அமைப்புச் செயலாளர் சி.எஸ்.குமார், மாநில செய்தித் தொடர்பாளர் என்.வீரசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.