Published : 15 Dec 2020 09:35 PM
Last Updated : 15 Dec 2020 09:35 PM

மதுரை வண்டியூர் தெப்பக்குளத்தில் விரைவாக நீர்மட்டம் குறையும் மர்மம் என்ன?- வைகை ஆற்று தண்ணீர் நிரப்பியும் பயனில்லாத அவலம்

தமிழகத்தில் உள்ள பெரிய தெப்பக்குளங்களில் மதுரை வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளம் முக்கியமானது. மன்னர் திருமலை நாயக்கரால் உருவாக்கப்பட்ட இந்தத் தெப்பக்குளம், மதுரையின் அடையாளமாகவும், முக்கிய சுற்றுலாத்தலமாகவும் அறியப்படுகிறது.

மதுரைக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் இந்த வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தை பார்க்காமல் திரும்புவதில்லை. இந்த தெப்பக்குளத்தில் நடக்கும் தெப்பத்திருவிழா புகழ்பெற்றது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இந்தத் தெப்பத்திருவிழாவை காணத் திரள்வார்கள். இந்தத் தெப்பக்குளத்தில் கடந்த வாரம் அருகில் உள்ள வைகை ஆற்று தண்ணீர் கொண்டு வந்து நிரப்பப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் மட்டுமே இது 4-வது முறையாக வைகை ஆற்று தண்ணீரை கொண்டு வந்து தெப்பக்குளம் நிரம்பப்படுகிறது. ஆனால், நிரம்பிய வேகத்தில் தெப்பக்குளத்தில் தண்ணீர் குறைந்துவிடுகிறது.

தற்போது மழைக்காலம் என்பதால் தண்ணீர் ஆவியாகுவதற்கு பெரியளவில் வாய்ப்பு இல்லை. தொடர் மழையால் நிலத்தடி நீர்மட்டமும் சிறப்பாக இருப்பதால் தெப்பக்குளம் தண்ணீரை உறிஞ்சப்படுவதற்கு வாய்ப்பு இல்லை. ஆனால், கடந்த வாரம் நிரப்பப்பட்ட தெப்பக்குளம் தண்ணீர், தற்போது 2 அடி வரை வேகமாகக் குறைந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோல், இந்த ஆண்டில் இதற்கு முன் வைகை ஆற்று தண்ணீரை கொண்டு வந்து நிரப்பியப்போதும் இதுபோல் தண்ணீர் குறைந்தது.

இதுகுறித்து மதுரை தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் என்.நரேந்திரபாபு கூறியதாவது:

1645-ம் ஆண்டில் திருமலை நாயக்கர் இந்தத் தெப்பக்குளத்தை உருவாக்கியுள்ளார்.

இந்தத் தெப்பக்குளம், வைகை நதியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த தெப்பக்குளம் 4 மீட்டர் ஆழத்தில் சுமார் 36 கோடி லிட்டர் தண்ணீரில் தொட்டி சேமிப்பு திறன் கொண்டுள்ளது. 5 மீட்டர் ஆழத்தில் 43.75 கோடி லிட்டர் தண்ணீரை சேமிக்கலாம். 1645 முதல் 1950 வரை, மழைக்காலம் மற்றும் வெள்ளத்தின் போது, ​​வைகை நதி நீர் தானாகவே நிலத்தடி நீர் வழிகள் வழியாக தெப்பக்குளத்திற்கு தண்ணீர் வந்துள்ளது. மேலும் சுற்றுவட்டாரப்பகுதியில் பெய்யும் மழைநீரும் தானாக தெப்பக்குளத்திற்கு வந்துள்ளது.

வைகை அணை கட்டிப்பிறகு வைகை ஆற்றில் நீரின் ஓட்டம் கட்டுப்படுத்தப்பட்டது. தொடர்ச்சியான நீரோட்டம் நிறுத்தப்பட்டு, இயல்பாக வரக்கூடிய மழைநீரும் தடைப்பட்டதால் தெப்பக்குளம் வறட்சிக்கு இலக்கானது.

தற்போது வைகை ஆற்றில் இருந்து வைகை ஆற்று தண்ணீர் புண்ணியத்தால் தெப்பக்குளம் நிரப்படுகிறது. இயல்பாக வரக்கூடிய மழைநீர் தற்போது வருவதில்லை. ஆனால், கடந்த வாரம் நிரப்ப்பட்ட தெப்பக்குளம் உடனடியாக 2 அடி வரை குறைந்துள்ளது.

இவ்வளவு வேகத்தில் தெப்பக்குளம் குறைய வாய்ப்பில்லை. தெப்பக்குளத்தில் இருந்து நிலத்தடி நீராக தண்ணீர் உறிஞ்சப்படுவதற்கு வாய்பும் இல்லை. அதனால், தெப்பக்குளத்தில் ஏதாவது அடிப்பகுதியில் இருந்து தண்ணீர் தண்ணீர் கசிந்து வெறியேறிக் கொண்டிருக்கலாம்.

கடந்த காலத்தில் வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் இயல்பாக வைகை ஆற்றில் வரக்கூடிய கால்வாய் இருந்தபோது தண்ணீர் வெளியேறக்கூடிய கால்வாயும் இருந்திருக்க வாய்ப்புள்ளது.

இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், மாநகராட்சி நிர்வாகம், தண்ணீர் எப்படி குறைகிறது என்பதை ஆய்வு செய்து தெப்பக்குளத்தில் நிரந்தரமாக தேக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இயல்பாக தெப்பக்குளத்திற்கு வரக்கூடிய பராம்பரிய பாதைகளை கண்டறிந்து அதையும் தூர்வார வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x