Published : 15 Dec 2020 05:15 PM
Last Updated : 15 Dec 2020 05:15 PM

வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள சிறப்பு முகாம்: 29.7 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்

தமிழகம் முழுவதும் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் செய்துகொண்டனர். இதில் மொத்தம் 29.7 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

தேர்தல் நெருங்கும் வேளையில் வாக்களிக்கச் செல்பவர்கள் வாக்குச்சாவடிக்குச் செல்லும்போது உங்கள் பெயர் பட்டியலில் இல்லை எனத் தகவல் கேட்டுக் கொந்தளிப்பார்கள். ஏமாற்றத்துடன் திரும்புவார்கள். இதைத் தவிர்க்க தேர்தல் ஆணையம் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் செய்ய முகாம்களை நடத்தும்.

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பட்டியல், படிவங்கள் இருக்கும். பொதுமக்கள் மேற்சொன்ன காரணங்களைத் தவிர்க்க இம்முகாம்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். வரும் ஆண்டு சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலை எதிர்கொள்ள உள்ளதால் பொதுமக்கள் கட்டாயம் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா எனச் சரிபார்க்கவும் இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் ஜன.01/2021ஆம் தேதியினைத் தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு 2021-ம் ஆண்டின் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

இச்சுருக்கமுறை திருத்தம் தொடர்பாக வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த நவ.16 அன்று வெளியிடப்பட்டடது. மேற்படி வரைவு வாக்காளர் பட்டியல் தமிழகம் முழுவதும் சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் மற்றும் வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது.

பொதுமக்கள் தங்களது பெயர்கள் மற்றும் குடும்பத்தாரின் பெயர்கள் குறித்த விவரங்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனவா என்பது குறித்து சரிபார்த்துக் கொள்ள வேண்டும். மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காமல் உள்ளவர்கள் மற்றும் ஜன.01/2021 அன்று 18 வயது நிறைவு அடைகின்றவர்கள் (01.01.2003-ம் தேதிக்கு முன் பிறந்தவர்கள்) படிவம் 6-ஐப் பூர்த்தி செய்தும் பெயரைச் சேர்க்கலாம்.

பெயர்கள் நீக்கம் தொடர்பாக படிவம் 7-ஐப் பூர்த்தி செய்தும், பதிவுகளில் திருத்தம் தொடர்பாகப் படிவம் 8-ஐப் பூர்த்தி செய்தும், சட்டப்பேரவைத் தொகுதிக்குள்ளேயே ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் குடிபெயர்ந்து புதிய வசிப்பிடத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப் படிவம் 8-­Aவைப் பூர்த்தி செய்தும், அதற்கான ஆவண ஆதார நகலினை இணைத்தும் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் / பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல அலுவலரின் அலுவலகத்தில் டிச.15/2020 காலத்திற்குள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டது.

மேலும், நவ.21,22 மற்றும் டிச.12, 13 ஆகிய தேதிகளில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது.

அம்மையத்தில் பொதுமக்கள் உரிய படிவங்களைப் பெறவும், பூர்த்தி செய்த படிவங்களைச் சிறப்பு முகாம் நடைபெறும் இடங்களில் சேர்க்கவும் செய்யலாம். மேலும் www.elections.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் பெயர்கள் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்கள் தொடர்பாகவும் விண்ணப்பிக்காலம் என அறிவிக்கப்பட்டு அதன்படி பொதுமக்கள் சுருக்க திருத்தமுறை மேற்கொண்டனர்.

இதில் 29.72 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்ட தகவல்:

“வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், புதிய வாக்காளர் சேர்த்தல், பட்டியலில் பெயர் சரிபார்ப்புக்கான சிறப்பு முகாம் 4 நாட்கள் நடைபெற்றது. அதில், புதிதாகப் பெயர் சேர்த்தல் மற்றும் தொகுதி மாற்றம் செய்வதற்கு 20 லட்சத்து 62 ஆயிரம் பேரும், பெயர் நீக்குவதற்கு 3 லட்சத்து 99 ஆயிரம் பேரும் விண்ணப்பித்துள்ளனர். முகவரி மாற்றம் செய்வதற்கு 1 லட்சம் பேர் என மொத்தமாக 29 லட்சத்து 72 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்”.

இவ்வாறு தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x