தமிழக மீனவர்களையும் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை தேவை: ஜி.கே.வாசன்

ஜி.கே.வாசன்: கோப்புப்படம்
ஜி.கே.வாசன்: கோப்புப்படம்
Updated on
1 min read

மத்திய அரசு இலங்கை அரசுடன் பேசி, கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (டிச.15) வெளியிட்ட அறிக்கை:

"ராமேஸ்வரம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த 26 மீனவர்கள் 5 விசைப்படகுகளில் ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்றபோது இலங்கைக் கடற்படையினர், தமிழக மீனவர்களைக் கைது செய்து, அவர்களது படகுகளைப் பறிமுதல் செய்துள்ளனர். இலங்கைக் கடற்படையின் இச்செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது.

கடந்த பல ஆண்டுகளாகத் தொடர்ந்து இலங்கைக் கடற்படையினரின் அத்துமீறல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தங்களின் வாழ்வாதாரத்திற்காக மீன் பிடிக்கக் கடலுக்குச் செல்லும் மீனவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்துவதும், அவர்களைக் கைது செய்வதும், படகுகளைப் பறிமுதல் செய்வதும், சேதப்படுத்துவதும் தொடர்கதையாகி வருகிறது.

மத்திய அரசு உடனடியாக வெளியுறவுத்துறை அமைச்சர் மூலம் இலங்கை அரசுடன் பேசி, இந்தப் பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டும். கைது செய்யப்பட்ட மீனவர்களையும் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்".

இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in