Published : 15 Dec 2020 01:41 PM
Last Updated : 15 Dec 2020 01:41 PM

விவசாயிகளைத் தீவிரவாதிகள் என்று கூறிய பாஜகவை முதல்வர் பழனிசாமி ஆதரிக்கிறார்: ஸ்டாலின் விமர்சனம்

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வாக்காளரையும் திமுகவினர் சந்தித்து, அதிமுக அரசின் ஊழல்களை எடப்பாடி பழனிசாமியின் தோல்விகளை பாஜக தமிழகத்திற்குச் செய்துள்ள பச்சைத் துரோகத்தைப் பட்டியலிடுங்கள் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இன்று (டிச. 15), திமுகவின் தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அன்னை வேளாங்கண்ணி கலைக் கல்லூரி அரங்கில் சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற திமுக முன்னோடிகள் படத்திறப்பு நிகழ்ச்சியில் காணொலி வாயிலாகக் கலந்துகொண்டு, மறைந்த நாகை முருகேசன், மேரி லூர்துசாமி, மடுவை அ.துரை, கே.எஸ்.ரூஸோ ஆகியோரின் திருவுருவப் படங்களைத் திறந்து வைத்துப் புகழஞ்சலி செலுத்தினார்.

இதையடுத்து ஸ்டாலின் பேசியதாவது:

"கரோனா காலத்தில், அமைச்சர்களும், முதல்வரும் கோட்டைக்குள்ளும், வீட்டுக்குள்ளும் முடங்கிக் கிடந்தபோது முதன்முதலில் களத்திற்குச் சென்று பணியாற்றியது நான்தான்!

அரசாங்கமே தூங்கிக் கொண்டிருந்தபோது, 'ஒன்றிணைவோம் வா' என்று கூறி, ஊர் ஊராக, வார்டு வார்டாக, மாவட்டம் மாவட்டமாகச் சென்றது திமுக தொண்டர்கள்தான்!

கரோனா காலத்தில், திமுகவினர் செய்த மருத்துவ உதவிகளை உணவு விநியோகத்தை அத்தியாவசியப் பொருட்கள் கொடுத்ததை இந்தியாவில் எந்தக் கட்சியும் செய்திருக்க முடியாது.

உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் பணியாற்றியவர்கள் திமுக தொண்டர்கள்! இதனால் ஒரு ஜெ.அன்பழகனை நாம் இழந்தோம்.

இன்றைக்கு தமிழ்நாட்டில் கொள்ளையடிக்கின்ற ஆட்சி நடக்கிறது! அரசு பணத்தைக் கொள்ளையடிக்கின்ற ஆட்சி.

அமைச்சர்கள் மட்டுமல்ல; அவர்களுக்கு எல்லாம் தலைவராக இருக்கும் முதல்வர் பழனிசாமி என அனைவருமே அரசின் பணத்தைச் சுருட்டுவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.

தினமும் முதலீடு... முதலீடு என்று விளம்பரம் செய்கிறார்கள். ஆனால், அதிமுக ஆட்சியில் வந்த முதலீடுகள் எவ்வளவு என்று கேட்டால் இதுவரை கணக்குச் சொல்ல முடியவில்லை?

எத்தனை புதிய தொழிற்சாலைகள் என்று கேட்டால், விவரமே தெரியவில்லை. எவ்வளவு பேருக்கு வேலைவாய்ப்பு கொடுத்திருக்கிறீர்கள் என்று கேட்டால், அதற்கும் பதில் இல்லை.

முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு தோல்வி. இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு தோல்வி. முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் முதலீடுகளைப் பெறுவதற்காகப் போன வெளிநாட்டுப் பயணம் தோல்வி.

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டார்கள் தொழிலதிபர்கள். ஆனால், அப்படிப் போட்டவர்கள், இவர்கள் கமிஷன் கேட்பதைப் புரிந்துகொண்டு விட்டார்கள். அதனால் உண்மையான தொழிலதிபர்கள், உள்ளபடியே தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வேண்டும் என்று நினைக்கும் பல தொழிலதிபர்கள் வெளி மாநிலங்களுக்குப் போனார்கள். தமிழகத்தின் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. ஆகவே, தொழிலதிபர்களைத் தொழில் தொடங்க விடாமல் விரட்டிய ஆட்சி எடப்பாடி பழனிசாமி ஆட்சி.

இன்றைக்கு நாடே விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராடிக் கொண்டிருக்கிறது. டிராக்டர்களுடன் விவசாயிகள் டெல்லியில் குவிந்து வருகிறார்கள். தமிழ்நாட்டிலேயே டிராக்டர்களுடன் மறியலில் ஈடுபட்டு வருகிறார்கள். திமுகவின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

இப்போது கூட வருகின்ற 18-ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களும், நானும், நமது நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களும் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருக்கப் போகிறோம்.

எதற்காக? நம் நாட்டின் விவசாயிகளைக் காப்பாற்றவே நாம் இந்த அளவுக்கு ஜனநாயக ரீதியில் போராடிக் கொண்டிருக்கிறோம். விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றப் போராடுகிறோம். விவசாயிகளின் விளைபொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்க வேண்டும் என்று போராடுகிறோம். விவசாயிகளின் இலவச மின்சாரம் தொடர வேண்டும் என்று போராடுகிறோம். விவசாயிகளின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தாதீர்கள் என்று போராடுகிறோம்.

ஆகவே, தயவுசெய்து விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுங்கள் என்று கோரிக்கை வைக்கிறோம். மின்சாரத் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வராதீர்கள் என்று கோரிக்கை விடுக்கிறோம்.

ஆனால், எடப்பாடி பழனிசாமி என்ன செய்கிறார்? விவசாயிகளைத் தீவிரவாதிகள் என்று கூறிய பாஜகவை ஆதரிக்கிறார். விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் மூன்று வேளாண் சட்டங்களை ஆதரிக்கிறார். விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய விரும்பும் பாஜகவுடன் கைகோத்து நிற்கிறார்.

இவற்றுக்கெல்லாம் ஒரே காரணம், எடப்பாடி பழனிசாமியின் ஊழல்! அவர் இந்த நான்கு ஆண்டுகளில் முதல்வராகவும், அதற்கு முன்பு அமைச்சராகவும் சம்பாதித்த ஊழல் பணம்.

பாஜகவை முறைத்தால், எந்த நேரத்தில் வருமான வரித்துறை ரெய்டு வரும், எந்த நேரத்தில் அமலாக்கத்துறை ரெய்டு வரும், எந்த நேரத்தில் சிபிஐ வழக்கு வரும் என்று தெரியாது. ஆகவே, அரண்டு மிரண்டு தமிழகத்தின் உரிமைகளை அடகு வைக்கிறார் எடப்பாடி பழனிசாமி. விவசாயிகளின் உரிமைகளை அடகு வைக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

இதுபோன்ற அதிமுக அரசின் துரோகங்களை அமைச்சர்களின் ஊழல்களைக் களத்திற்குக் கொண்டுபோகும் காளையர்கள்தான் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள். அந்த நம்பிக்கையில்தான், இன்றைக்கு அதிமுகவின் ஊழலை ஊரெங்கும் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறோம். சட்டப்பேரவைத் தேர்தல் சிறப்புக் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வாக்காளரையும் நாம் பார்க்க வேண்டும். அதிமுக அரசின் ஊழல்களை எடப்பாடி பழனிசாமியின் தோல்விகளை பாஜக தமிழகத்திற்குச் செய்துள்ள பச்சைத் துரோகத்தைப் பட்டியலிடுங்கள்!".

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x