Published : 15 Dec 2020 01:18 PM
Last Updated : 15 Dec 2020 01:18 PM

அன்னை தெரசா இப்போது இருந்திருந்தால் மினி கிளினிக் உருவாக்கிய முதல்வர் பழனிசாமியை வாழ்த்தியிருப்பார்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெருமிதம்

மதுரை

அன்னை தெரசா இப்போது இருந்தால் அம்மாவை நேரடியாகச் சென்று வாழ்த்தியது போல் இன்றைக்கு நமது முல்வரையும் வாழ்த்தி இருப்பார் என்று அமைச்சர் ஆர் பி உதயகுமார் பெருமிதத்துடன் கூறினார்.

தமிழகம் முழுவதும் ஏழை எளிய மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு 2,000 அம்மா மினி கிளினிக்குகள் சேவை தொடங்கப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டு அவர் இவ்வாறு பேசியுள்ளார்.

மதுரையில் இன்று, முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர், கழக அம்மா பேரவை மற்றும் அம்மா சேரிடபுள் டிரஸ்ட் சார்பில் அம்மா மைய பயிற்சி முகாம் சார்பில் ஆசிரியருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:

நோயற்ற வாழ்வே குறைவற்றச் செல்வம் என்ற பழமொழிக்கு ஏற்ப எவ்வளவு செல்வம் இருந்தாலும் நோய் வந்துவிட்டால் செல்வத்தை அனுபவிக்க முடியாது. அப்படிப்பட்ட நோயற்ற வாழ்வை தமிழக மக்களுக்கு உருவாக்கித் தர வேண்டுமென்று அதுவும் குறிப்பாக கடைக்கோடியில் இருக்கும் ஏழை மக்களுக்கு மருத்துவ வசதி கிடைக்கும் வண்ணம் இன்றைக்கு தமிழகம் முழுவதும் 2,000 இடங்களில் அம்மா மினி கிளினிக்கை முதல்வர் தொடங்கி வைத்தார். அவருக்கு உறுதுணையாக துணை முதலமைச்சர் இருந்துள்ளார்.

இந்த அம்மா மினி கிளினிக்கில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் மற்றும் ஒரு உதவியாளர் என நியமிக்கப்பட்டு அவர்கள் கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் இல்லாத பகுதிகளில் மக்கள் வசிக்கும் இடங்களைக் கண்டறிந்து அவர்களுக்கு சாதாரண காய்ச்சல் போன்ற உடலில் நோய்களை சிகிச்சை அளிக்க உள்ளனர்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மக்களை தேடி அரசு திட்டங்களை உருவாக்கினா. அந்த வழியிலேயே இன்றைக்கு நமது முதல்வரும் மக்களைத் தேடி அவர்களின் நோய்களைத் தீர்க்கும் அரசாக திட்டங்களை வகுத்து வரலாற்றுப் பொன் எழுத்துக்களால் குறிக்கப்படும் வகையில் சாதனையை இன்றைக்கு முதல்வர் உருவாக்கி உள்ளார்

தொழு நோயாளிகளுக்கும், காச நோயாளிகளுக்கும் இலவசமாகப் பல மருத்துவமனைகளை உருவாக்கி அவர்களுக்கு தனது கரங்களில் மருத்துவம் செய்து அதன் மூலம் உலகம் முழுவதும் போற்றப்பட்ட கருணையின் வடிவம் அன்னை தெரசா.

அப்பேற்பட்ட அன்னை, தொட்டில் குழந்தை திட்டத்தை அறிந்து புரட்சித்தலைவி அம்மாவின் இல்லத்திற்கே நேரடியாக வந்து பாராட்டினார். அந்த அன்னை இப்போது இருந்திருந்தால் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மனிதநேயமிக்க மினி கிளினிக் திட்டத்தினை அறிந்து நிச்சயம் முதல்வரை நேரில் வந்து பாராட்டியிருப்பார்

அதுமட்டுமல்லாது மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியம் மூலம் 9,726 மருத்துவர்கள், 15,659 செவிலியர்கள் உட்பட 31,868மருத்துவப் பணியாளர்களை இன்றைக்கு முதல்வர் நியமித்து உள்ளார்

அதுமட்டுமல்லாது கடந்த 2011-ம் ஆண்டில் ஜெயலலிதா முதல்வராகப் பொறுப்பேற்கின்ற வரை தமிழகத்தில் 1,945 மருத்துவப் பணியிடங்கள் தான் இருந்தன 2016 வரை ஜெயலலிதா முதல்வராக இருந்த காலகட்டத்தில் அதனை 3,060 மருத்துவ இடங்களாக உயர்த்தினார்

அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு என்பது எட்டாக்கனியாக இருந்தது. அதை மாற்றி அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பைப் பெற வேண்டும் என்று முதல்வர் 7.5 உள் ஒதுக்கீடு ஒதுக்கினார் அதன் மூலம் தற்போது 313 அரசுப் பள்ளிமாணவர்களுக்கு எம்பிபிஎஸ் மருத்துவ இடங்கள் கிடைத்துள்ளன

கடந்த ஆண்டின் போது அரசுப் பள்ளியில் படிக்கிற 41 சதவீத மாணவர்களில் 6 நபர்களுக்கு தான் மருத்துவப் படிப்பு கிடைத்தது. ஆனால் தற்போது முதல்வர் திட்டத்தின் மூலம் 313 நபர்களுக்கு இடம் கிடைத்த வரலாற்றைக் உருவாக்கி இந்த மருத்துவப் படிப்பு மற்றும் இதர செலவிற்காக 16 கோடி சுழல் நிதியை ஏற்படுத்தி அந்தக் கட்டணத்தை அம்மாவின் அரசே செலுத்துகிறது

மேலும் தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டன. இதன்மூலம் கூடுதலாக தமிழகத்திற்கு 1,650 புதிய மருத்துவ இடங்கள் தோற்றுவிக்கப்பட்டு இதன் மூலம் 5300 நபர்கள் மருத்துவம் படிக்கும் சூழ்நிலை உருவாகும். இந்த 11 மருத்துவ கல்லூரிகளை உருவாக்க 3,995 கோடி ரூபாயினை முதல்வர் ஒதுக்கி உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x