Published : 15 Dec 2020 01:28 PM
Last Updated : 15 Dec 2020 01:28 PM

சென்னை ஐஐடி மாணவர்கள் மேலும் 79 பேருக்குக் கரோனா தொற்று: மொத்த எண்ணிக்கை 183 ஆனது

சென்னை, அடையாறு ஐஐடியில் மாணவர்கள், மெஸ் பணியாளர்களுக்குக் கரோனா தொற்று ஏற்பட்டது. இதில் கடைசி 3 நாட்கள் நடந்த பரிசோதனையில் 104 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் தொடர்ந்து மற்ற மாணவர்களுக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் மேலும் 79 மாணவர்களுக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 183 ஆனது.

தமிழகம் முழுவதும் கரோனா தொற்று பெருமளவில் குறைந்துள்ளது. ஆனாலும், முழுமையாகக் கட்டுக்குள் வராத நிலையில், உரிய வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் அனைவரும் கடைப்பிடிக்கவேண்டும் எனப் பொதுமக்களிடம் முதல்வர், அமைச்சர், சுகாதாரத்துறைச் செயலர் ஆகியோர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மாநிலம் முழுவதும் பொது சுகாதாரத்துறை, மாவட்ட ஆட்சியர்கள், சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் தொடர்ந்து கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமூக விலகல், முகக்கவசம் குறித்து என்னதான் வலியுறுத்தினாலும் அதைக் கடைப்பிடிக்காத போக்கை இன்றும் பல இடங்களில் பார்க்க முடிகிறது. தமிழகத்தில் கரோனா தொற்று அச்சம் காரணமாக இன்றுவரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. கல்லூரிகளில் இளநிலை இரண்டாம் ஆண்டு, முதுநிலை இறுதியாண்டுக்கான வகுப்புகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் சென்னையின் முக்கியக் கல்வி நிறுவனங்களில் ஒன்றான அடையாறு ஐஐடியில் கரோனா தொற்று திடீரென பரவியுள்ளது. மெஸ்ஸில் ஊழியர்களுக்குப் பரவிய கரோனா தொற்று மாணவர்களுக்குப் பரவியதா? அல்லது வெளியே சென்று வந்த மாணவர்கள் மூலம் அனைவருக்கும் பரவியதா? எனத் தெரியவில்லை.

திடீரென பரவிய கரோனா தொற்றைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட பரிசோதனையில் நேற்று ஒரே நாளில் 87 மாணவர்கள் உட்பட 104 பேருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

நேற்று ஆய்வு செய்த சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்துப் பேசினார்.

''செறிவூட்டல் பரிசோதனை மூலம் முழுவதுமாகப் பரிசோதனை செய்யப்படும். மாணவர்கள் கட்டுப்பாடில்லாமல் இருப்பதே இதுபோன்ற நிலைக்குக் காரணம். அரசு சொல்லும் பாதுகாப்பு நடைமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும்.

ஐஐடி சம்பவத்தைப் பாடமாக எடுத்துக்கொண்டு தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் கட்டாயம் பாதுகாப்பு நடைமுறைகளை அமல்படுத்த ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது'' என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்நிலையில் தொடர் பரிசோதனையில் மேலும் 79 மாணவர்களுக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கரோனா தொற்று 183 ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் 514 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டதில் 183 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் இதை உறுதிப்படுத்தினார்.

''சென்னை ஐஐடியில் நேற்று வரை 104 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 539 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்தோம். விடுதிகளில் உள்ளவர்கள், பணியாளர்களுக்கும் பரிசோதனை செய்துள்ளோம். இதில் இன்று 79 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று வரை ஐஐடியில் பரிசோதனை செய்தவர்களில் 25% பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. 978 மாதிரிப் பரிசோதனைகளில் 25 பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது. 953 பரிசோதனை முடிவுகளில் டிச.1-ம் தேதி முதல் இதுவரை 183 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது'' என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஐஐடியில் கரோனா தொற்றுப் பரவலை அடுத்து இறுதியாண்டு வகுப்புகளைத் தொடர்வது குறித்து உயர் கல்வித்துறை ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x