

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 371 பேர் கைது செய்யப்பட்டனர்.
காஞ்சிபுரம் மூங்கில் மண்டபத்தில் உள்ள ரிலையன்ஸ் கடையின் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சியினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட முயன்றனர். அவர்களை போலீஸார் கைதுசெய்ய முன்ற போது தள்ளுமுள்ளு ஏற்பட்டு, சிஐடியூ மாவட்டச் செயலர் முத்துக்குமாருக்கு காயம்ஏற்பட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் குற்றம்சாட்டினர். இப்போராட்டத்தில் ஈடுபட்ட 40 பேரை போலீஸார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், மதிமுக சார்பில் நடந்த போராட்டத்தில் விவசாயிகள் சங்கமாவட்டச் செயலர் கே.நேரு, மதிமுக மாவட்டச் செயலர் வளையாபதி உட்பட பலர் பங்கேற்றனர். இதில் 30 பேர் கைதாகினர்.
செங்கை மாவட்டத்தில் தாம்பரம் ராஜாஜி சாலை ரிலையன்ஸ் கடையின் முன்பும், குரோம்பேட்டை நாகப்பா நகர் ரிலையன் கடையின் முன்பும், நங்கநல்லூர் ரிலையன்ஸ் பிரிவு முன்பும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக கட்சியினரின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
செங்கல்பட்டில் விவசாய சங்கம்சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் மதிமுக துணை பொதுச் செயலர் மல்லை சத்தியா, மார்க்சிஸ்ட் மாவட்ட தலைவர் இ.சங்கர்உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 200 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம் அருகே அகில இந்தியவிவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெ.அருள், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த துளசி நாராயணன், ஜி.சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சுந்தரராசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலர் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன்உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதைத் தொடர்ந்து போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து 101 பேரை கைது செய்த போலீஸார் மாலையில் விடுவித்தனர்.
இதேபோல் ஆவடி நகராட்சி அலுவலகம் அருகே கம்யூனிஸ்ட் கட்சியினர், காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.