Last Updated : 02 Oct, 2015 04:07 PM

 

Published : 02 Oct 2015 04:07 PM
Last Updated : 02 Oct 2015 04:07 PM

போக்குவரத்து நெரிசலைத் தடுக்க தேனியில் திட்டச் சாலைப் பணி 21 ஆண்டாக முடக்கம்

தேனி நகரில் போக்குவரத்து நெரிசலைத் தடுக்க, கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வரப்பட திட்டச் சாலைப் பணி 21 ஆண்டுகளாக முடங்கி உள்ளது.

திண்டுக்கல், திருச்சி, வத்தலகுண்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு, தேனி வழியாகவே அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன. அதேபோல கம்பம், சின்னமனூர், உத்தமபாளையம், பெரியகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் தேனி வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன.

இதுதவிர, தேனி நகரில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் மற்றும் காய்கறி சந்தைக்கு அரிசி, பலசரக்கு, காய்கறிகள் லாரிகள் மூலம் கொண்டு வரப்படுவதோடு, இப்பகுதியில் விளையும் விளைபொருட்களும் லாரி, வேன் மூலம் வெளிமாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது.

இதனால், தேனி - அல்லிநகரம் சாலை போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாகவே எப்போதும் காணப்படுகிறது. இதன்காரணமாக அவ்வப்போது விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இதனையடுத்து, எதிர்கால வாகனப் போக்குவரத்தை கருத்தில்கொண்டு தேனி நகர் பகுதியில் புதிதாக சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்காக கடந்த 1984-ம் ஆண்டு, தேனி அல்லிநகரம் நகராட்சி மூலம் பிரதான திட்டச்சாலை மற்றும் இணைப்புச் சாலை திட்டம் கொண்டு வரப்பட்டது.

இந்த திட்டம் மூலம் 60 அடி அகலத்தில் அல்லிநகரத்தில் இருந்து தேனி பள்ளிவாசல் தெரு வழியாக வருவதற்கும், மீறு சமுத்திரம் கண்மாய்க் கரையை ஒட்டியுள்ள, பள்ளிவாசல் தெரு வழியாக கம்பம் சாலையில் இணைக்கவும், அதேபோல, கொட்டக்குடி ஆற்றுப் பாலத்தை அடுத்துள்ள பகுதியில் இருந்து சுப்பன் செட்டி தெரு வழியாக அரண்மனைப் புதூர் விலக்கு வரை மற்றொரு பிரதான சாலை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

மேலும் நெடுஞ்சாலைகளுடன் இணைக்க 40 அடி அகலத்தில் 10 இணைப்புச் சாலைகளும் அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டது. இதற்கான பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வந்தன.

இதற்கிடையில், சாலைகள் அமைக்கும் பகுதிகளில் தனியார் இடங்களும் இருந்ததால் அதனை நகராட்சி நிர்வாகம் கையகப்படுத்தி பணிகளை மேற்கொண்டு வந்தது. மிகவும் தாமதமாக நடைபெற்று வந்த இத்திட்டப் பணிகள் கடந்த 21 ஆண்டுகளாக முற்றிலும் நிறுத்தப்பட்டு தற்போது முடங்கி உள்ளது.

இந்த திட்டச்சாலைப் பணிகள் முழுமை அடைந்திருந்தால், தேனி நகரம் அடிக்கடி போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கவேண்டிய அவலம் ஏற்பட்டிருக்காது.

இதுகுறித்து தேனி நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ராஜாராமிடம் கேட்டபோது, அவர் கூறுகையில், தேனி நகரில் திட்டச்சாலைப் பணி பொதுமக்கள் பங்களிப்புடன் தொடங்கப்பட்டது. பலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கிவிட்டு, பணிகளைத் தொடங்க நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது. ஆனால், இழப்பீட்டுத் தொகை வழங்க நகராட்சியில் போதிய நிதி இல்லை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x