

இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை காயத்ரி நடித்த 'மாமனிதன்' திரைப்படம் சென்னை விநியோக உரிமை பிரச்சினையால் உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இந்நிலையில், தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தரப்பு விளக்கத்தை அடுத்துத் தடையை நீக்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை காயத்ரி நடித்த 'மாமனிதன்' திரைப்படம், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ளது. இந்தப் படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன்ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளனர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதமே முடிவடைந்துவிட்டது. இந்தப் படம் வெளியாக இருந்த நிலையில் அபிராமி மெகா மால் நிறுவனம் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.
அந்த வழக்கில் 'மாமனிதன்' திரைப்பட சென்னை விநியோக உரிமையை கிளாப் என்ற நிறுவனத்திடம் வாங்கியதாகவும், விநியோக உரிமையைத் தங்களுக்கு வழங்காததால் படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன், 'மாமனிதன்' படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்திருந்தார்.
இந்த நிலையில் தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா சார்பில் இன்று ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன், அபிராமி மெகா மால் நிறுவனத்துடன் தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா விநியோக உரிமை தொடர்பாக எந்த உரிமையும் கோரவில்லை என்றும், அந்த ஒப்பந்தத்திற்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதால், படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்றும் வாதிட்டார்.
தயாரிப்பாளர் தரப்பு வாதத்தை ஏற்ற நீதிபதி கார்த்திகேயன், 'மாமனிதன்' படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளார்.