Last Updated : 14 Dec, 2020 07:31 PM

 

Published : 14 Dec 2020 07:31 PM
Last Updated : 14 Dec 2020 07:31 PM

இந்தியத் திரைப்பட விழா புதுச்சேரியில் நாளை தொடக்கம்: ஒத்த செருப்பு படத்துக்கு விருது

இந்தியத் திரைப்பட விழா புதுச்சேரியில் நாளை தொடங்குகிறது. இதில் வரும் 19-ம் தேதி வரை மாலையில் திரைப்படங்கள் இலவசமாகத் திரையிடப்படுகின்றன.

புதுச்சேரி அரசு சார்பில் ஆண்டுதோறும் திரைப்பட விழா நடைபெறுவது வழக்கம். இத்திரைப்பட விழா இந்தியாவிலேயே புதுவையில் மட்டும்தான் 37 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நடப்பாண்டுக்கான இந்தியத் திரைப்பட விழா-2020, டிசம்பர் 15-ம் தேதி (நாளை) அலையன்ஸ் பிரான்சேஸ் அரங்கில் நடைபெறுகிறது.

இதில் 2019-ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படமாக இயக்குனர் பார்த்திபனின் 'ஒத்த செருப்பு' படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சங்கரதாஸ் சுவாமிகள் பெயரிலான இந்த விருதினை இயக்குனர் பார்த்திபனுக்கு, முதல்வர் நாராயணசாமி நாளை மாலை நடைபெறும் விழாவில் வழங்குகிறார். இதில் விருதுக்கான பாராட்டுப் பத்திரத்துடன் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசும் தரப்படும்.

அதையடுத்து அலையன்ஸ் பிரான்சேஸ் கலையரங்கில் 'ஒத்த செருப்பு' திரைப்படம் இலவசமாகத் திரையிடப்படும். அதைத் தொடர்ந்து வரும் 19-ம் தேதி வரை இதே அரங்கில் நாள்தோறும் மாலை 6 மணிக்கு இதர மொழித் திரைப்படங்களை இலவசமாகப் பார்க்கலாம்.

படங்கள் விவரம்:
16-ம் தேதி வங்கமொழித் திரைப்படம் 'ஜேஸ்தோபுத்ரா',
17-ம் தேதி மலையாளத் திரைப்படம் 'ஜல்லிக்கட்டு',
18-ம் தேதி தெலுங்குத் திரைப்படம் 'எஃப்2 -ஃபன் அண்டு ப்ரஸ்ட்ரேஷன்',
19-ம் தேதி இந்தி திரைப்படம் 'உரி த ஸர்ஜிகல் ஸ்ட்ரைக்'

ஆகிய படங்கள் திரையிடப்பட உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x