Last Updated : 14 Dec, 2020 06:52 PM

 

Published : 14 Dec 2020 06:52 PM
Last Updated : 14 Dec 2020 06:52 PM

ஓமனில் இருந்து குமரிக்கு படகில் தப்பி வந்த மீனவர் 6 பேர் சிறையில் அடைப்பு

ஓமனில் இருந்து விசைப்படகில் குமரிக்கு தப்பி வந்த 6 மீனவர்களும் இன்று சிறையில் அடைக்கப்பட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் முட்டத்தை சேர்ந்த ஜோசப் எட்வின், சகாய ததேயு, ஆல்டோ, பிரான்சிஸ், ஸ்டீபன், வங்காளதேத்தை சேர்ந்த முகமது உடின் ஆகிய 6 மீனவர்களும் ஓமன் நாட்டில் அரேபிய முதலாளி அப்துல்லா கமீஷ் என்பவரின் விசைப்படகில் மீன்பிடிக்கும் தொழில் செய்து வந்னர்.

ஓராண்டிற்கு மேல் வேலை செய்த மீனவர்களுக்கு கடந்த 5 மாதமாக சம்பளம் வழங்காவில்லை. இதுகுறித்து இந்திய தூதரகத்தில் மீனவர்கள் புகார் அளித்தனர். இதனால் மீனவர்கள் மேலும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். உணவு, அடிப்படை வசதியின்றி தவித்தனர். இதனால் உயிரை காப்பாற்றி கொள்ளும் நோக்கில் மீன்பிடி படகிலேயே கடந்த 4ம் தேதி இந்தியாவிற்கு புறப்பட்டனர். அவர்கள் 2500 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் கடல் பயணம் மேற்கொண்டு 13ம் தேதி அதிகாலை கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் மீன்பிடி துறைமுகத்தை வந்தடைந்தனர்.

6 மீனவர்களும் விசைப்படகுடன் மாயமானது குறித்து ஓமன் நாட்டில் அரேபிய முதலாளி அப்துல்லா கமீஷ் புகார் அளித்திருந்தார். இதைத்தொடர்ந்து முட்டத்திற்கு தப்பி வந்த மீனவர்களிடம் கடலோர பாதுகாப்பு குழும போலீஸார், கியூ பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது உரிய ஆவணங்கள் இன்றி அனுமதி பெறாமல் ஓமன் நாட்டு விசைப்படகில் குமரி வந்ததற்காக 6 மீனவர்கள் மீதும் மெரைன் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர் இன்று காலை இரணியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 6 மீனவர்களும் நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், உயிர் பாதுகாப்பிற்காக சொந்த ஊருக்கு தப்பி வந்த 6 மீனவர்களையும் விடுவிப்பதுடன், அவர்களுக்கு அரேபிய முதலாளியிடம் இருந்து கிடைக்க வேண்டிய சம்பளம், மற்றும் பாஸ்போர்ட்டை பெற்று கொடுக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள், மறறும் மீனவ அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x