Published : 08 Oct 2015 09:28 AM
Last Updated : 08 Oct 2015 09:28 AM
இந்திரதனுஷ் தடுப்பூசி இரண்டாம் கட்ட முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
இந்திரதனுஷ் தடுப்பூசி இரண்டாம் கட்ட முகாம் சென்னை உட்பட 19 மாவட்டங்களில் இன்று தொடங்கியது. சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தடுப்பூசியை குழந்தைகளுக்கு வழங்கி முகாமை தொடங்கி வைத்தார். சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் (டிஎம்இ) எஸ்.கீதாலட்சுமி, பொது சுகாதாரத்துறை இயக்குநர் (டிபிஎச்) கே.குழந்தைசாமி, குழந்தைகள் நல மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் சுந்தரி, பச்சிளம் குழந்தைகள் சிறப்பு சிகிச்சைப் பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசும்போது, “இரண்டாம் கட்ட இந்திரதனுஷ் தடுப்பூசி முகாம் இன்று முதல் வரும் 14-ம் தேதி வரை நடக்கிறது. இதையடுத்து நவம்பர் மாதம் 7-ம் தேதி முதல் 16-ம் தேதி வரையும், டிசம்பர் 7-ம் தேதி முதல் 14-ம் தேதி வரையும் மற்றும் ஜனவரி 7-ம் தேதி முதல் 14-ம் தேதி வரையும் முகாம்கள் நடக்க உள்ளன. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் இலவசமாக தடுப்பூசி போடப்படும். பிறந்த குழந்தை முதல் 2 வயது வரையிலான குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் தடுப்பூசி போடாமல் இருந்தாலோ அல்லது விடுபட்டிருந்தாலோ முகாமில் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 300 வீடுகளுக்கு ஒரு சுகாதாரப் பணியாளர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் அந்த வீடுகளைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது மட்டுமின்றி கொசு ஒழிப்புப் பணியிலும் ஈடுபடுவார்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT