Published : 14 Dec 2020 03:14 AM
Last Updated : 14 Dec 2020 03:14 AM

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 18 நிறுவனங்கள் சார்பில் ரூ.24,500 கோடி முதலீட்டில் 24 தொழில் திட்டங்கள்: முதல்வர் பழனிசாமி முன்னிலையில் இன்று ஒப்பந்தம் கையெழுத்து

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்ரூ.24,500 கோடி முதலீட்டில் 24தொழில் திட்டங்களை தொடங்குவதற்காக 18 தொழில் நிறுவனங்களுடன் முதல்வர் பழனிசாமி முன்னிலையில் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.

கரோனா காலத்திலும் அதிக முதலீட்டை ஈர்த்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இந்த ஆண்டில்இதுவரை ரூ.40 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. அந்த வகையில், மேலும் ரூ.24,500 கோடி முதலீட்டில் 24 புதிய தொழில் திட்டங்கள்தொடங்க ஒப்பந்தம் செய்யப்படுகிறது.

முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று பகல் 12 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில், காஞ்சிபுரத்தில் இண்டோ ஸ்பேஸ் - வல்லம் வடகல், திருப்பூரில் எஸ்எஸ்இஎம், பெரும்புதூரில் யாகிளாஸ் டெக், திருவள்ளூரில் பேட்டர் மற்றும் டாரன்ட் கேஸ், ஓசூரில் சபாஹ் இண்டியா, மைவா பார்மா, கங்கைகொண்டானில் அஞ்சன் டிரக்ஸ், சிறுசேரியில் அதானி டேட்டா சென்டர், ஓசூரில் ஓலா எலெக்ட்ரிக் மொபிலிட்டி, காஞ்சிபுரத்தில் வோல்டாஸ், ஒரகடத்தில் கியூரிட் இந்தியா, ஃபர்ஸ்ட் சோலார் உள்ளிட்ட 18 நிறுவனங்களின் சார்பில் 24 தொழில் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. இதன்மூலம், 54 ஆயிரம் பேருக்குவேலைவாய்ப்பு கிடைக்கும் என்றுதமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதுதவிர, நாட்டிலேயே முதல்முறையாக தொழிலக வீட்டுவசதிதிட்டத்தையும், சிப்காட் தொழிற்பூங்காக்களின் புவியியல் தகவல் அமைப்பு இணையதளத்தையும் முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்.

முன்னதாக, சென்னை ராயபுரத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில், 2 ஆயிரம் மினிகிளீனிக் திட்டத்தின் கீழ் மினி கிளீனிக் ஒன்றையும் முதல்வர் திறந்து வைக்கிறார். இதில், மருத்துவர், செவிலியர் மற்றும் தேவையான மருந்து, மாத்திரைகள் உள்ளிட்ட வசதிகள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x