Published : 05 Oct 2015 08:09 AM
Last Updated : 05 Oct 2015 08:09 AM
இலங்கை, துபாயில் இருந்து மதுரை வந்த விமானங்களில் கடத்தி வரப்பட்ட சுமார் ரூ.10 கோடி மதிப்புள்ள 31.758 கிலோ தங்கத்தை மத்திய வருவாய் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இலங்கை, துபாயில் இருந்து மதுரை வரும் விமானங்களில் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் நேற்று முன்தினம் மதுரை விமான நிலையத்துக்கு வந்தனர்.
3 பேர் கைது
இலங்கையில் இருந்து மாலை 3.30 மணி அளவில் மதுரை வந்த தனியார் விமானத்தில் வந்த பயணிகளையும், இதைத் தொடர்ந்து துபாயில் இருந்து மாலை 4.40 மணி அளவில் மதுரை வந்த விமானத்தில் பயணம் செய்தவர்களையும் மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். பின்னர் இரு விமானங்களிலும் சோதனை செய்யப்பட்டது.
இதில் மொத்தம் 31.758 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது. இதன் மதிப்பு ரூ.10 கோடி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக விமானப் பயணிகள் 3 பேரை அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் 10 பயணிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இது குறித்து மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கூறியபோது, ‘தனியார் விமானம் மூலம் தங்கம் கடத்தப்படுவதாக சில நாட்களுக்கு முன்பு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தற்போது நடத்தப்பட்ட சோதனையில் 31.758 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 3 பயணிகள் கைது செய்யப்பட்டனர். மேலும் 10 பயணிகளிடம் விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT