Published : 13 Dec 2020 01:04 PM
Last Updated : 13 Dec 2020 01:04 PM

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக விவசாய அமைப்புகளின் காத்திருப்புப் போராட்டம்: மதிமுக ஆதரவு

சென்னை

விவசாயிகளின் டெல்லி முற்றுகைப் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகத்தில் தொடர் காத்திருப்புப் போராட்டத்தை நடத்துவதற்கு அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு தீர்மானித்துள்ளது. இதற்கு வைகோ ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்ட அறிக்கை:

“மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும், மின்சாரச் சட்டத்தையும் ரத்துசெய்யக் கோரி கடந்த நவம்பர் 26ஆம் தேதியில் இருந்து லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் அமைதிவழி அறப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மத்திய அரசின் சார்பில் விவசாயிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்த நிலையில், போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தும் நடவடிக்கைகளில் விவசாயிகள் இறங்கியுள்ளனர்.

இந்தியாவின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயத் துறையை முற்றிலும் சீர்குலைத்து கோடானகோடி மக்களின் வாழ்வாதாரத்தை கார்ப்பரேட் பெரு நிறுவனங்களுக்கு தாரைவார்த்துக் கொடுப்பதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் எனப் போராட்டக் களத்தில் விவசாயிகள் உறுதியாக இருக்கின்றனர்.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற முடியாது என்று மத்திய பாஜக அரசு தெரிவித்துவரும் நிலையில், டிசம்பர் 14 முதல் ரயில் மறியல் போராட்டம், சாலை மறியல் போராட்டம் என அறப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல விவசாயிகள் அறைகூவல் விடுத்துள்ளனர்.

விவசாயிகளின் டெல்லி முற்றுகைப் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகத்தில் தொடர் காத்திருப்புப் போராட்டத்தை நடத்துவதற்கு அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு தீர்மானித்துள்ளது.

அதன்படி டிசம்பர் 14-ம் தேதி தேதி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெறும் தொடர் காத்திருப்புப் போராட்டத்திற்கும், தமிழகமெங்கும் நடைபெறும் போராட்டங்களுக்கும் மதிமுக, தம் ஆதரவை வழங்குகிறது.

அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்வுரிமைக்காக டெல்லியில் விவசாயிகள் போராடுகிறார்கள் என்பதை மனதில் கொண்டு விவசாயிகள் போராட்டத்திற்கு தமிழகத்தில் அனைவரும் பேராதரவு வழங்க வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.

காத்திருப்புப் போராட்டங்களில் மதிமுக விவசாய அணி தோழர்கள் அனைவரும் பங்கேற்று கடமையாற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்”.

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x