Last Updated : 12 Dec, 2020 04:32 PM

 

Published : 12 Dec 2020 04:32 PM
Last Updated : 12 Dec 2020 04:32 PM

களியக்காவிளை வட்டார போக்குவரத்து, காவல் நிலைய சோதனைச் சாவடிகளில் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனை: ரூ.84 ஆயிரம் கணக்கில் வராத பணம் பறிமுதல், போலீஸார் உட்பட 5 பேர் மீது வழக்கு

களியக்காவிளை வட்டார போக்குவரத்து அலுவலக சோதனைச் சாவடி, காவல்நிலைய சோதனைச் சாவடி ஆகியவற்றில் இன்று அதிகாலையில் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனை மேறகொண்டனர்.

இதில் கணக்கில் வராத ரூ.84 ஆயிரம் பணம் சிக்கியதைத் தொடர்ந்து மோட்டார் வாகன ஆய்வாளர், எஸ்.எஸ்.ஐ. உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் வட்டார போக்குவரத்து அலுவலக சோதனைச் சாவடி உள்ளது. இங்கு தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் வாகனங்கள், கேரளாவில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு ஆவணங்கள் பரிசோதிக்கப்படுகின்றன.

இதைபோல் இதன் அருகே படந்தாலுமூட்டில் காவல்துறை சோதனைச் சாவடி உள்ளது. வெகுநாட்களாக செயல்படாமல் பூட்டியே கிடந்த இந்த சோதனைச் சாவடி, கரோனா ஊரடங்கு தளர்விற்குப் பின்னர் அதிகமான வாகனங்கள் செல்வதால் சமீபத்தில் திறந்து செயல்பட்டு வருகிறது.

24 மணி நேரமும் போலீஸார் இங்கு பணிக்கு நியமிக்கப்பட்டு வாகனங்களை சோதனை செய்து வருகின்றனர்.

எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் களியக்காவிளையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலக சோதனைச் சாவடி, படந்தாலுமூடு காவல்துறை சோதனைச் சாவடி ஆகியவற்றில் சட்டவிரோதமாக பொருட்களை கடத்திச் செல்லும் வாகனங்களை அனுமதிப்பதற்கு லஞ்சப் வாங்கப்படுவதாக லஞ்ச ஒழிப்புப் போலீஸாருக்கு தொடர் புகார்கள் வந்தன.

இதைத்தொடர்ந்து நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. மதியழகன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புப் போலீஸார் இன்று அதிகாலை 4 மணியளவில் இரு சோதனை சாவடிகளிலும் ஒரே நேரத்தில் அதிரடியா சோதனை மேற்கொண்டனர்.

இரண்டரை மணி நேரமாக நடந்த சோதனையில் கணக்கில் வராத பணம் அலுவலகத்திற்குள் இருந்தது. இவற்றிற்கு உரிய பதிலளிக்க முடியாமல் அலுவலர்கள் திணறினர்.

வட்டாரப் போக்குவரத்து அலுவலக சோதனைச் சாவடியில் ரூ.64,140 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. படந்தாலுமூடு காவல்துறை சோதனை சாவடியில் ரூ.20,740 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இரு சோதனைச் சாவடிகளிலும் மொத்தம் 84,880 கணக்கில் வராத பணத்தை லஞ்ச ஒழிப்புப் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து படந்தாலுமூடு சோதனைச் சாவடியில் பணியில் இருந்த எஸ்.எஸ்.ஐ. சுந்தர்ராஜன், காவலர்கள் காளிமுத்து, மோகன்தாஸ் ஆகியோர் மீதும், களியக்காவிளை வட்டார போக்குவரத்து அலுவலக சோதனை சாவடியில் பணியில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் சரவணதாஸ், ஊழியர் குமரேசன் ஆகியோர் மீதும் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

தமிழக, கேரள எல்லையில் உள்ள இரு சோதனைச் சாவடிகளில் நடந்த லஞ்ச ஒழிப்புச் சோதனையும், பணம் பறிமுதல் செய்யப்பட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x