Published : 12 Dec 2020 03:16 AM
Last Updated : 12 Dec 2020 03:16 AM

மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை மதுரை மாவட்டத்தில் புதிதாக கிரானைட் குவாரிக்கு உரிமம் வழங்க உயர் நீதிமன்றம் தடை

மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரிகள் தொடங்க மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை புதிதாக உரிமம் வழங்கக் கூடாது என தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நடந்த கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தக் கோரி டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில், ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விசாரணை நடத்தி பல லட்சம் கோடி ரூபாய் அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி பல்வேறு பரிந்துரைகளை சமர்ப்பித்தார்.

இந்நிலையில், நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஜி.ஜெயச்சந்திரன் அமர்வில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த வாதம்:

தென்னிந்திய கிரானைட் உரிமையாளர்கள் கூட்டமைப்பு தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன்: கிரானைட் குவாரிகளை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட சகாயம் முறையாக விசாரணை நடத்தவில்லை. அவர் சமர்ப்பித்த அறிக்கையே கிடைக்காத நிலையில் அதை அடிப்படையாக வைத்து அமலாக்கத் துறை நடவடிக்கை எடுப்பது கேள்விக்குறி. அனைவர் மீதும் குற்றம்சாட்டி அனைத்து குவாரிகளையும் அதிகாரிகள் மூடியுள்ளனர். சகாயத்தின் கணக்குப்படி 80-90% கிரானைட் உற்பத்தி என்பது அபரிமிதமானது.

அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண்: உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி மாவட்ட மற்றும் மாநில எல்லைகளில் கனிமவள கொள்ளையைத் தடுக்ககண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. சகாயத்தின் 212 பரிந்துரைகளில் 131 பரிந்துரைகள் மட்டும் ஏற்கக்கூடியவை. 67 பரிந்துரைகள் ஏற்புடையதல்ல. மற்ற 14 பரிந்துரைகள் மத்திய அரசால் முடிவு செய்யப்பட வேண்டியவை. இதுதொடர்பாக அரசின் நிலைப்பாட்டை ஆராயும் வகையில் நீதிமன்றம் பொதுவான ஒரு வழக்கறிஞரை நியமித்து முடிவு எடுக்கலாம். மதுரை மாவட்டத்தில் வழக்குக்கு தொடர்பு அல்லாத மற்ற குவாரிகள் இயங்கி வருகின்றன. புதிய இடங்களில் குவாரிகள் அமைக்க உரிமம் வழங்குவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு வாதம் நடந்தது. இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையிலேயே சகாயம் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அந்த அறிக்கையை ஏற்கக்கூடாது என கிரானைட் உரிமையாளர்கள் தரப்பில் எப்படி கோர முடியும். மேலும் கிரானைட் உரிமம் புதிதாக வழங்குவது தொடர்பாக மத்திய அரசு மட்டுமே முடிவு எடுக்க முடியும். ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் அடிப்படையில் விசாரணை நடத்த அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது.

அத்துடன் கீழவளவு, கீழையூர் போன்ற 4 கிராமங்களில் உள்ள வீடுகள் சேதமாகும் அளவுக்கு அதிகளவில் கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. யானைமலை மட்டுமே மிச்சமுள்ளது. தமிழகம் முழுவதும் பிற பகுதிகளில் இருந்தும் கனிமவளங்கள் கடத்தப்படுவதை தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் புதிதாக கிரானைட் குவாரிகள் தொடங்க மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை உரிமம் வழங்கஇடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜன.22-க்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x