ரஜினியின் ஆன்மிக அரசியல் 234 தொகுதியிலும் வெற்றிபெறும்: அர்ஜுன் சம்பத் தகவல்

ரஜினியின் ஆன்மிக அரசியல் 234 தொகுதியிலும் வெற்றிபெறும்: அர்ஜுன் சம்பத் தகவல்
Updated on
1 min read

ரஜினிகாந்த் அறிவித்துள்ள ஆன்மிக அரசியல் என்பது தேசபக்தி அரசியல், தமிழகத்தில் 234 தொகுதியிலும் ஆன்மிக அரசியல் வெற்றி பெறும் என இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ரஜினிகாந்த் அறிவித்துள்ள ஆன்மிக அரசியல் என்பது தேசபக்தி அரசியல். தமிழகத்தில் 234 தொகுதியிலும் ஆன்மிக அரசியல் நிச்சயம் வெற்றிபெறும். தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்து விட்டு, அண்ணா சிலைக்கோ, ஈவேரா சிலைக்கோ மாலை அணிவிக்க ரஜினி செல்லவில்லை. விவேகானந்தர் மடத்திற்குத்தான் சென்றார்.

நாட்டின் பாதுகாப்பிற்குத் தேவையான நடவடிக்கைகளை பிரதமர் மோடி எடுத்து வருகிறார். சீனாவின் அத்துமீறலை சரியான நேரத்தில் அடக்கினார். தமிழக மீனவர்களை நெருங்கவே இலங்கை ராணுவம் அச்சப்படுகிறது. நமது நாட்டில் உற்பத்தியாகும் வேளாண் பொருட்களை எங்கு வேண்டுமானாலும் விற்கலாம் என்ற வாய்ப்பை பிரதமர் ஏற்படுத்தித் தந்துள்ளார்.

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமலுக்கு வந்தால், அரிசி கடத்தல் தடுக்கப்படும். உண்மையான விவசாயிகள் பிரதமரின் திட்டங்களை ஆதரிக்கிறார்கள். திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விவசாயிகளை தூண்டி விடுகின்றன. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நுழைந்தது போல், டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் தேசவிரோதிகள் ஊடுருவியுள்ளனர். இவர்களை டெல்லி போலீஸார் கைது செய்ய வேண்டும், என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in