Last Updated : 11 Dec, 2020 05:07 PM

 

Published : 11 Dec 2020 05:07 PM
Last Updated : 11 Dec 2020 05:07 PM

ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம்: மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பது தொடர்பாக மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள் இன்று நேரில் ஆய்வு செய்தனர்.

நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க பல்வேறு இடங்களில் ஆங்கிலேயர் காலம் முதல் தொல்லியல் அகழ்வாய்வுகள் நடைபெறுகின்றன. இங்கு கிடைக்கும் தொல்லியல் பொருட்களின் முக்கியத்துவத்தை பொருத்து அங்கு அருங்காட்சியகங்கள் அமைக்கப்படுகின்றன.

இந்திய தொல்லியல் ஆய்வுத்துறையின் சார்பில் அமைக்கப்படும் இவற்றை தொல்லியல் ஆய்வுகளின் அருங்காட்சியகங்கள் என அழைக்கின்றனர். இவற்றை பொதுமக்கள் கண்டு தம் வரலாற்று முக்கியத்துவத்தை அறிந்துகொள்கின்றனர்.

இந்த வகையில், தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த ஆதிச்சநல்லூரில் உலகதரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என, கடந்த பிப்ரவரி மாதம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்த பொது பட்ஜெட்டில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கரோனா ஊரடங்கு காரணமாக ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகளில் தொய்வு ஏற்பட்டது. தற்போது கரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அருங்காட்சியகம் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகளை மத்திய தொல்லியல் துறை தொடங்கியிருக்கிறது.

ஆதிச்சநல்லூரில் உலகதரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வது தொடர்பாக மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள் இன்று நேரில் ஆய்வு செய்தனர்.

மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல கண்காணிப்பாளர் அருண்ராஜ் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் இன்று காலை ஆதிச்சநல்லூர் வந்தனர்.

ஆதிச்சநல்லூர் பரம்பு உள்ளிட்ட பகுதிகளில் அருங்காட்சியகம் அமைக்க வாய்ப்புள்ள 5 இடங்களை அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அவர்களுக்கு தேவையான இடங்களை ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் இடங்களை காட்டினார்.

மத்திய தொல்லியல் துறை ஆய்வாளர்கள் எத்திஸ்குமார், முத்துக்குமார், அலுவலர் அரவாலி, பராமரிப்பு அலுவலர் சங்கர், பாலகிருஷ்ணன் ஆகியோர் அந்த குழுவில் இடம் பெற்றிருந்தனர்.

தமிழக தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவானந்தம், சிவகலை அகழாய்வு இயக்குநர்கள் பிரபாகரன் மற்றும் தங்கதுரை, ஆதிச்சநல்லூர் அகழாய்வு இயக்குநர் லோகநாதன், மாவட்ட சுற்றுலா அலுவலர் சீனிவாசன், கருங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வி, எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, வரலாற்று ஆசிரியர் மாணிக்கம், கிராம நிர்வாக அலுவலர்கள் கந்த சுப்பு, மணிமாலா, சிவராமன், லூர்து பிரான்சிஸ் உள்ளிட்டோர் மத்திய தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு தேவையான உதவிகளை செய்தனர்.

இது குறித்து மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல கண்காணிப்பாளர் அருண்ராஜ் கூறும்போது, ஆதிச்சநல்லூரில் உலகதரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படவுள்ளது. அதற்காக 5 இடங்களை பார்த்துள்ளோம்.

இந்த விவரம் மத்திய தொல்லியல் துறைக்கு அனுப்பப்பட்டு, அரசு ஒப்புதல் அளிக்கும் இடத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும். 3 ஆண்டுகளில் அருங்காட்சியகம் அமைக்கும் பணி முடிவடையும்.

அதுவரை தமிழக அரசு சார்பில் கட்டப்பட்டுள்ள அருங்காட்சியத்தில் தொல்லியல் பொருட்களை வைத்து தற்காலிகமாக திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x