

மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் முறையிட்டனர்.
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் கே.நீலமேகம், முகமது ரஸ்வி ஆகியோர் நீதிபதிகள் என்.கிருபாகரன் பி.புகழேந்தி அமர்வில் இன்று காணொலி காட்சி வழியாக பேசியதாவது:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஆயுர்வேத யுனானி ஹோமியோபதி மருத்துவம் பயின்ற மருத்துவர்கள் ஆங்கில மருத்துவ மேற்படிப்பு பயின்று அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்கும் மத்திய அரசின் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகள் மருத்துவர்கள் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்..
கரோனா தொற்று காலத்தில் இது போன்ற மருத்துவர்களின் அறிவிப்பால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக கூறி இவர்களின் போராட்டத்திற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்றனர்.
இது தொடர்பாக மனு தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதிகள் அறிவித்தனர்.
இதுவரை அலோபதி மருத்துவர்கள் (ஆங்கில மருத்துவர்கள்) செய்துவந்த அறுவை சிகிச்சைகளை இனி ஆயுர்வேத மருத்துவர்களும் செய்யலாம் என்ற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மேலும் நிதி ஆயோக்,எல்லா மருத்துவத் துறைகளையும் இணைத்து ஒரே மருத்துவ முறையை (நவீன மருத்துவம், ஆயுஷ்) 2030-ம் ஆண்டில் கொண்டுவர உள்ளது.
ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யலாம் என்ற அறிவிப்பை ரத்து செய்யக் கோரி தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.