தேனியில் நவீன ஆய்வகங்கள், மாணவர் விடுதிகளுடன் ரூ.266 கோடியில் கால்நடை மருத்துவக் கல்லூரி கட்டிடம்: முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்

தேனி மாவட்டம் வீரபாண்டியில் கட்டப்பட உள்ள புதிய அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்துக்கு முதல்வர் பழனிசாமி நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சியில் அடிக்கல் நாட்டி, பூமி பூஜை செய்து கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தார். உடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் க.சண்முகம், துறை செயலாளர் கே.கோபால், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் சி.பாலச்சந்திரன்.
தேனி மாவட்டம் வீரபாண்டியில் கட்டப்பட உள்ள புதிய அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்துக்கு முதல்வர் பழனிசாமி நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சியில் அடிக்கல் நாட்டி, பூமி பூஜை செய்து கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தார். உடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் க.சண்முகம், துறை செயலாளர் கே.கோபால், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் சி.பாலச்சந்திரன்.
Updated on
1 min read

நவீன ஆய்வகங்கள், மாணவர் விடுதி உள்ளிட்ட வசதிகளுடன் தேனியில் ரூ.265 கோடியே 87 லட்சம் மதிப்பில் கட்டப்பட உள்ள அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி கட்டிடத்துக்கு முதல்வர் பழனிசாமி நேற்று அடிக்கல் நாட்டினார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சட்டப்பேரவையில் விதி எண் 110-ன்கீழ் கடந்த மார்ச் 20-ம் தேதிமுதல்வர் பழனிசாமி, தேனி மாவட்டத்தில் ஒரு புதிய கால்நடை மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி, தேனிமாவட்டம், வீரபாண்டி கிராமத்தில் 253.64 ஏக்கரில் ரூ.265.87 கோடியில் கட்டப்பட உள்ள புதிய அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்துக்கு முதல்வர் பழனிசாமி காணொலி மூலம் நேற்று அடிக்கல் நாட்டினார்.

இக்கல்லூரி மதுரை, விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள கால்நடைகளுக்கான மருத்துவ சேவையை பூர்த்தி செய்யும்.இக்கல்லூரி கேரள மாநிலஎல்லையில் அமைந்துள்ளதால், பால், இறைச்சி மற்றும் கால்நடை உற்பத்திப் பொருட்களை பதப்படுத்துதல் மற்றும் சந்தைப்படுத்துதலுக்கும் பெரும் வாய்ப்பாக அமையும். 2020-21 கல்வி ஆண்டில் இந்த கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 40 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.

இந்த மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நிர்வாகக் கட்டிடம், நவீன வகுப்பறைகளுடன் கூடிய 8 கல்வித் தொகுதி கட்டிடங்கள், மாணவ, மாணவிகளுக்கான தனித்தனி விடுதிகள், உணவகம், கல்லூரி முதல்வருக்கான குடியிருப்பு, விருந்தினர் இல்லம் போன்ற பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படும்.

மேலும், நவீன ஆய்வக வசதிகளுடன் கூடிய பால் மற்றும் இறைச்சிகளை பதப்படுத்தும் தொழில்நுட்ப நிலையங்கள் உட்பட 15 துறைகள், கால்நடை உற்பத்தி தொழில்நுட்பங்களை விவரிப்பதற்காக கால்நடை பண்ணை வளாகம், கால்நடை சிகிச்சை சார்ந்த பயிற்சிகளை மாணவர்களுக்கு அளிக்கும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய கால்நடை மருத்துவ சிகிச்சைக்கான மருத்துவமனை வளாகம் ஆகிய வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளன.

இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலர் க.சண்முகம், கால்நடை பராமரிப்புத் துறை செயலர் கே.கோபால், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் சி.பாலச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in