Published : 11 Dec 2020 07:30 AM
Last Updated : 11 Dec 2020 07:30 AM

ராமேசுவரம் கடற்பகுதியில் பேச்சாலை மீன் சீசன் தொடக்கம்: கேரளாவுக்கு அனுப்பும் மீனவர்கள்

பாம்பன் கடற்கரையில் குவிக்கப்பட்டுள்ள பேச்சாலை மீன்கள்.

ராமேசுவரம்

ராமேசுவரம் கடல்பகுதியில் பேச்சாலை மீன் சீசன் தொடங்கியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் மன்னார் வளைகுடா கடற்பகுதியில் 200-க்கும் மேற்பட்ட படகுகளில் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். தற்போது புரெவி புயலுக்கு பின்னர் எட்டு நாட்கள் கழித்து பாம்பன் மீனவர்கள் கடலுக்குச் சென்று நேற்று காலை கரை திரும்பினர். தற்போது பேச்சாலை மீன் சீசன் தொடங்கியுள்ளதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து பாம்பன் விசைப் படகு மீனவர்கள் கூறியதாவது:

ஆண்டுதோறும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நவம்பரில் வடகிழக்குப் பருவ மழையின்போது பேச்சாலை மீன் பிடி சீசன் தொடங்கும்.

இதில் ஒரு படகுக்கு அதிகபட்சம் 5 டன் வரை கூட மீன்கள் சிக்கும். பேச்சாலை மீன் அதிகம் சுவையாக இருக்காது என்பதால், மக்கள் இதை விரும்புவதில்லை. அதனால் மீன் எண்ணெய் மற்றும் கோழித் தீவனம் தயாரிக்க கேரள மாநிலத்துக்கு அனுப்பப்படுகிறது என்றனர்.

பேச்சாலை மீன்பிடி சீசனில் மீன்கள் அதிகம் சிக்கும் என்பதால் விசைப்படகு மீனவர்கள் அரசால் தடைசெய்யப்பட்ட அதிக திறன் கொண்ட படகு மற்றும் இரட்டை மடி வலைகளை பயன்படுத்து கின்றனர்.

இரட்டை மடிவலைகளை கடலில் 1 கி.மீ சுற்றளவில் விரிக்கும் போது கடலின் அடி மட்டத்தில் இருக்கும் பவளப்பாறைகள், சிறிய ரக கடல்வாழ் உயிரினங்கள், கடல் புற்கள் அழிக்கப்படுகின்றன. இதனால் தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தினால் மீன்பிடி உரிமம் ரத்து செய்யப்படும் என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x