

தூத்துக்குடியில் மழை ஓய்ந்து நான்கு நாட்களாகியும் பல இடங்களில் தண்ணீர் வடியாததால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாநகரம் பூகோள ரீதியாக கடல் மட்டத்தை விட சற்று தாழ்வாக அமைந்திருப்பதால் ஆண்டு தோறும் மழைக்காலத்தில் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கி மக்கள் பாதிக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது. இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால், இந்த பணிகள் முழுமையாக முடிவடையாததால் இந்த ஆண்டும் மழைநீர் தேங்கி மக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
புரெவி புயலின் தாக்கத்தால் தூத்துக்குடி மாவட்டத்தில் 3 நாட்களாக கனமழை கொட்டியது. இதனால் தூத்துக்குடி நகரம் முழுவதும் மழைநீர் தேங்கியது. 250-க்கும் மேற்பட்ட மோட்டார் பம்புகள், 20-க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் மூலம் மழைநீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் மழை ஓய்ந்து 4 நாட்கள் ஆகியும் பல இடங்களில் இன்னும் தண்ணீர் வடியவில்லை.
பிரையண்ட் நகர், தபால் தந்தி காலனி, ஆசிரியர் காலனி, ராஜீவ் நகர், கோக்கூர், ஸ்டேட் பாங்க் காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்னும் வீடுகளை சூழ்ந்து தண்ணீர் பெருமளவில் தேங்கி நிற்பதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து வெயிலடித்து வருவதால் பிரதான சாலைகள், தெருக்களில் மழைநீர் வடிந்துவிட்டது. தாழ்வான பகுதிகளில் தொடர்ந்து மழைநீர் தேங்கியுள்ளது. வானிலை இதுபோல் நீடித்தால் அடுத்த ஓரிரு நாட்களில் மழைநீர் முழுவதுமாக வடிந்து சகஜ நிலை திரும்பிவிடும் என மாநகராட்சி அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.