

மத்திய அரசின் 2020ஆம் ஆண்டுக்கான நட்சத்திரக் கல்லூரி தகுதியை சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள எஸ்ஐஇடி கல்லூரிக்கு வழங்கியுள்ளது.
நீதிபதி பஷீர் அகமது சையீத் மகளிர் கல்லூரி (எஸ்ஐஇடி) முதல்வர் ஷானாஸ் அகமது இது தொடர்பாகக் கூறுகையில், ''மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் 2020ஆம் ஆண்டுக்கான நட்சத்திரக் கல்லூரி தகுதியை எங்கள் கல்லூரிக்கு வழங்கி பெருமைப்படுத்தி இருப்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் மற்றும் உயிர் வேதியியல் துறைகளின் உயர்கல்வி மேம்பாட்டுக்காக ரூ.1.59 கோடியை ஒதுக்கியுள்ளது.
மத்திய அரசால் இத்தகுதிக்காக வழங்கப்பட்டுள்ள இம்மானியமானது எமது கல்லூரியின் அறிவியல் துறையை உயர்கல்வியில் மேம்படுத்துவதற்கும், எமது அண்டைப் பகுதியில் உள்ள பள்ளிகளும், கல்லூரிகளும், பொதுமக்களும் அடிப்படை அறிவியல் கல்வியை மேம்படுத்திக் கொள்வதற்காகவும் பயன்படுத்தப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.