

சிவகங்கை மாவட்டத்தில் 10 ஆயிரம் ஏக்கரில் மிளகாய், வெங்காயம் பாதிக்கப்பட்டுள்ளதாக தோட்டக்கலை கூடுதல் இயக்குநர் தமிழ்வேந்தன் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம், இளையான்குடி, காளையார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் மிளகாய், வெங்காயம் உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.
இந்நிலையில் புரெவி புயலால் அப்பகுதியில் மிளகாய், வெங்காயம் பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார்.
இதையடுத்து இன்று தோட்டக்கலை கூடுதல் இயக்குநர் தமிழ்வேந்தன் தலைமையிலான அதிகாரிகள் திருப்புவனம், இளையான்குடி, காளையார்கோவில் பகுதிகளில் பாதிக்கப்பட்ட பயிர்களைப் பார்வையிட்டனர்.
அவர்களுடன் தோட்டக்கலை துணை இயக்குநர் அழகுமலை, உதவி இயக்குநர்கள் சந்திரசேகர், ரேவதி, தர்மர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டபிறகு கூடுதல் இயக்குநர் தமிழ்வேந்தன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் 10 ஆயிரம் ஏக்கரில் மிளகாயும், 125 ஏக்கரில் வெங்காயமும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆய்வு குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும். இதேபோல் மாவட்ட நிர்வாகமும் தனியாக பாதிப்பு குறித்து அறிக்கை அனுப்பும். அதன்பிறகு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும், என்று கூறினார்.