

சிவகங்கை அருகே 400 ஏக்கர் நெற்பயிர்கள் வெள்ளநீரில் மூழ்கி அழுகி வருகிறது. தேங்கியுள்ள தண்ணீரை 10 நாட்களாக வெளியேற்ற முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
சிவகங்கை அருகே நாடமங்கலம் பெரிய கண்மாய் நீர்ப்பிடிப்புப் பகுதியில் வேம்பங்குடி கிராமத்திற்குரிய விவசாய நிலங்கள் உள்ளன.
இந்தாண்டு வேம்பங்குடி விவசாயிகள் 400 ஏக்கரில் நெல் சாகுபடி செய்துள்ளனர். நெற்கதிர்கள் பால் பிடிக்கும் பருவத்தில் உள்ளன. இந்நிலையில் அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நாடமங்கலம் கண்மாய் முழுமையாக நிரம்பியது.
இதனால் கண்மாய்க்கு செல்லக் கூடிய தண்ணீர் அப்படியே வேம்பங்குடி விவசாய நிலங்களிலேயே தேங்கியுள்ளன. வெள்ளநீர் சூழ்ந்ததால், நெற்பயிர்கள் அழுகி வருகின்றன. பத்து நாட்களாக வெள்ளநீரை வெளியேற்ற முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து வேம்பங்குடி விவசாயிகள் கூறியதாவது:
நாடமங்கலம் பெரிய கண்மாய் முழுமையாக நிரம்பிவிட்டது. கண்மாயின் மாறுகால் பாயும் கழுங்கு பகுதியை அடைத்து வைத்துள்ளனர். இதனால் கண்மாயில் இருந்து தண்ணீர் வெளியேறவில்லை.
கண்மாயில் இருந்து மாறுகால் பாய்ந்தால் மட்டுமே விவசாய நிலங்களில் தேங்கியிருக்கும் வெள்ளநீர் கண்மாய்க்கு செல்லும். இதுகுறித்து 10 நாட்களாக தொடர்ந்து அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் பயிர்கள் அழுகி வருகின்றன. எங்களுக்கு நிவாரணம் தேவையில்லை. ஆனால் பயிரை காப்பாற்ற தண்ணீரை வெளியேற்றினால் மட்டும் போதும், என்று கூறினர்.