Published : 10 Dec 2020 02:31 PM
Last Updated : 10 Dec 2020 02:31 PM

மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம்: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (டிச. 10) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"தமிழ்நாட்டில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில், மேல்நிலைப் பள்ளிகளில் 11-ம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த மாணவியர் அனைவருக்கும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் 2001-2002ஆம் கல்வியாண்டில் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டது. பின்பு, 2005-2006ஆம் கல்வியாண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு பயிலும் அனைத்துப் பிரிவு மாணவ, மாணவியருக்கும் இத்திட்டத்தின் கீழ் மிதிவண்டிகள் வழங்கப்பட்டு மாணவ, மாணவியர் பயனடைந்து வருகின்றனர்.

ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, 11-ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தினை சீரிய முறையில் தொடர்ந்து 2020-2021ஆம் கல்வியாண்டில் செயல்படுத்துகிறது. இந்த ஆண்டு 2 லட்சத்து 38 ஆயிரத்து 456 மாணவர்கள், 3 லட்சத்து 6,710 மாணவியர், என மொத்தம் 5 லட்சத்து 45 ஆயிரத்து 166 மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தினைத் தொடங்கி வைக்கும் அடையாளமாக, தமிழ்நாடு முதல்வர் இன்று 9 மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார்".

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x