

புதுச்சேரியில் இன்று புதிதாக 24 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இறப்பு எண்ணிக்கை 617 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (டிச.10) வெளியிட்டுள்ள தகவல்:
"புதுச்சேரி மாநிலத்தில் 1,570 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரியில் 12 பேருக்கும், காரைக்காலில் 6 பேருக்கும், மாஹேவில் 6 பேருக்கும் என மொத்தம் 24 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இன்றைய தினம் ஏனாமில் யாருக்கும் தொற்று இல்லை.
மேலும், புதுச்சேரி வில்லியனூர் வி.வி.நகரைச் சேர்ந்த 45 வயது ஆண் நபர், லாஸ்பேட்டை ஜீவானந்தபுரத்தைச் சேர்ந்த 72 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 617 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.65 சதவீதமாக உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 37 ஆயிரத்து 363 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் 209 பேரும், வீட்டுத் தனிமையில் 165 பேரும் என மொத்தம் 374 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று 18 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 36 ஆயிரத்து 372 (97.35 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 4 லட்சத்து 28 ஆயிரத்து 947 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், 3 லட்சத்து 86 ஆயிரத்து 699 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது".
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.