

கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே சாலையில் நடந்துசென்றவர், அங்கிலிருந்த பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார். அவர் மரடைப்பால் உயிரிழந்திருக்கலாம் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில் கழிவுநீர் தேங்கி, சாலை சேதமடைந்து பள்ளமாக இருந்தது. நேற்று காலைஅந்த வழியாக நடந்து வந்த கார் ஓட்டுநர் நரசிம்மன் (56), கழிவுநீர் தேங்கியிருந்த பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார். சாலையில் இருந்த பள்ளத்தை மாநகராட்சி சரி செய்யாததும் பள்ளம் தெரியாத அளவுக்கு கழிவுநீர் தேங்கியதை சென்னை குடிநீர் வாரியம் அகற்றாததும்தான் நரசிம்மன் உயிரிழக்க காரணம் என சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
அதைத் தொடர்ந்து மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரிய ஊழியர்கள் அங்கு தேங்கி இருந்த கழிவுநீரை அகற்றி, சாலை பள்ளங்களை கட்டுமானக் கழிவுகளால் நிரப்பினர்.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் கூறியதாவது:
நரசிம்மனின் உயிரிழப்புக்கு மழைநீர் வடிகால்வாயோ, பாதாள சாக்கடை ஆள்நுழைவு குழியோ காரணமில்லை. கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் உடற்கூறாய்வு செய்யப்பட உள்ளது.கடும் மாரடைப்பு ஏற்பட்டதேஉயிரழப்புக்கு காரணமாகஇருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர். உடற்கூறாய்வு முடிவில் இறப்புக்கான காரணம் தெரியவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நரசிம்மனின் மனைவியும், தனது கணவர் இறப்புக்கு மழைநீர் வடிகால்வாய், பாதாள சாக்கடை காரணமில்லை என தெரிவித்துள்ளார்.