Published : 09 Dec 2020 08:02 PM
Last Updated : 09 Dec 2020 08:02 PM

லாரிகளுக்கு குறிப்பிட்ட நிறுவனங்களில் ஜிபிஎஸ் கருவி வாங்கச் சொல்லும் அரசின் உத்தரவு: உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை 

சென்னை

லாரிகளுக்குப் பொருத்தப்படும் ஜிபிஎஸ் கருவிகளைக் குறிப்பிட்ட எட்டு நிறுவனங்களிடம் மட்டுமே வாங்க வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் குறிப்பிட்ட நிறுவனங்களின் வேகக்கட்டுப்பாட்டுக் கருவி, ரிஃப்ளக்டர், ஸ்டிக்கர் மற்றும் ஜிபிஎஸ் கருவிகளை வாங்கி லாரிகளில் பொருத்தினால்தான், வாகனத்தைப் புதுப்பிக்க முடியும் என அதிகாரிகள் நிர்பந்தித்து வருகின்றனர்.

இந்த வேகக்கட்டுப்பாட்டுக் கருவி அண்டை மாநிலங்களில் ரூ.1500க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் குறிப்பிட்ட எட்டு நிறுவனங்களின் கருவிகளை ரூ.10 ஆயிரம் கொடுத்து வாங்க வேண்டியுள்ளது.

இதேபோல, ரிஃப்ளக்டர், ஸ்டிக்கர்கள் வெளி மாநிலங்களைக் காட்டிலும், இங்கு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதில் பலவகையான ஊழல் தமிழகத்தில் நடக்கிறது என லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஸ்மார்ட் மொபிலிட்டி அசோசியேஷன் சார்பில் ஹக் ரொசியோ என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “மத்திய மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, வாகனங்கள் செல்லக்கூடிய இடங்களின் புவியிடத்தைக் கண்டறியும் வாகனம் இருக்கும் இடத்தைக் கண்டறியும் (VLTD - வெய்க்கிள் லொக்கேஷன் டிராக்கிங் டிவைஸ்) கருவி பொருத்த வேண்டும் என்று 2018-ம் ஆண்டு உத்தரவிட்டது.

பின்னர் அரசுத் துறை வாகனங்கள், இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள், ரிக்‌ஷாக்கள் ஆகியவற்றிற்குத் தளர்வு வழங்கப்பட்டு, மற்ற அனைத்துப் பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்கும் பொருத்த வேண்டும் என்று தமிழ்நாடு போக்குவரத்துத் துறை உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வி.எல்.டி.டி. கருவிகளைக் குறிப்பிட்ட எட்டு நிறுவனங்களிடம் மட்டுமே வாங்க வேண்டும் என்று கடந்த நவம்பர் 18-ம் தேதி போக்குவரத்துத் துறை உத்தரவிட்டது. 140க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ள நிலையில் தன்னிச்சையாக, வெளிப்படைத் தன்மை இல்லாமல் குறிப்பிட்ட நிறுவனங்களில் மட்டுமே வாங்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது சட்ட விரோதமானது.

எனவே இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். வழக்கு முடியும் வரை தடை விதிக்க வேண்டும்” எனக் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி, குறிப்பிட்ட நிறுவனங்களின் வாகன இடம் காட்டும் கருவிகளைப் பொருத்த வேண்டும் என்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், வழக்கு குறித்து தமிழகப் போக்குவரத்துத் துறைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 18-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x