Published : 08 Dec 2020 07:20 PM
Last Updated : 08 Dec 2020 07:20 PM

எட்டுவழிச் சாலை திட்டத்தைக் கைவிட்டதாக முதல்வர் பழனிசாமி அறிவிக்க வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை

சேலம் எட்டுவழிச் சாலை திட்டத்தைக் கைவிட வேண்டும். மத்திய அரசின் திட்டம் என்று சொல்லித் தப்பித்துக் கொள்ள நினைக்கக் கூடாது. கைவிட்டு விட்டதாக வெளிப்படையாக அறிவிக்க முன்வர வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வர் பழனிசாமியை வலியுறுத்தியுள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை:

“விவசாயிகள் தமது வாழ்வுரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்காகத் தொடர்ச்சியான போராட்டங்களை உறுதியாக மேற்கொண்டு வரும் நிலையில், சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றலாம் என உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, விவசாயிகள் மற்றும் இயற்கை - சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

குறிப்பாக விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் ஜீவாதார நில உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கு ஆதரவாக அதிமுக அரசு கருத்துகளை உச்ச நீதிமன்றத்தில் எடுத்து வைக்காதது இதற்கு முக்கியக் காரணமாகும். மத்திய பாஜக அரசு இத்திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டது, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ரத்தாகக் காரணம் ஆகிவிட்டது.

எல்லா வகையிலும் விவசாயிகளுக்கு எதிரிகளாக மத்திய பாஜக அரசும், அதிமுக அரசும் கூட்டணி வைத்துச் செயல்பட்டு - வளர்ச்சி என்ற போர்வையில் விவசாயிகளை வஞ்சிக்கும் முயற்சியில் தற்போதைக்கு வெற்றி பெற்றிருந்தாலும், இரு அரசுகளுக்கும் மக்கள் மன்றம் உரிய பாடத்தை வாக்குச்சீட்டு மூலம் நிச்சயம் கற்பிக்கும்.

விவசாயிகளின் நலனைத் துச்சமென நினைத்து, கமிஷன் என்ற ஒரே நோக்கத்தில் இத்திட்டத்தைச் செயல்படுத்த அராஜகமாக- காவல் துறையைப் பயன்படுத்தி, விவசாயிகளின் மீது தடியடி நடத்திய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இனியேனும் விவசாயிகளின் நலன் காத்திட முன்வருவாரா?

விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அக்கறை செலுத்த வேண்டுமே தவிர, மீண்டும் இத்திட்டத்தை நிறைவேற்ற எந்தவித முயற்சியும் செய்யக் கூடாது. ஆகவே சேலம் எட்டு வழிச் சாலை திட்டத்தைக் கைவிட வேண்டும் என முதல்வர் பழனிசாமியை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இது மத்திய அரசின் திட்டம் என்று சொல்லித் தப்பித்துக்கொள்ள நினைக்கக் கூடாது. கைவிட்டு விட்டதாக வெளிப்படையாக அறிவிக்க முன்வர வேண்டும் என்றே விவசாயிகள் அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்”.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x