

தமிழகத்தில் ரவுடிகள் மீதான வழக்குகளை விசாரிக்க மாவட்டம் தோறும் தனி நீதிமன்றம் அமைக்கக்கோரிய மனுவை உள்துறை செயலர் பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் கொள்ளை, வழிப்பறி, நகை பறிப்பு, கட்டப்பஞ்சாயத்து மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. கூலிப்படை கொலை அதிகளவில் நடைபெறுகிறது.
இந்த வழக்குகளில் உரிய நேரத்தில் நீதிமன்றத்தில் போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில்லை. இதனால் குற்றவாளிகள் அச்சமின்றி தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே, ரவுடிகள் மீதான வழக்குகளை விசாரிக்க மாவட்டம் தோறும் சிறப்பு நீதிமன்றம் அமைக்கவும், 30 நாளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும், ரவுடிகளுடன் நெருக்கமாக இருக்கும் போலீஸார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
பின்னர், நீதிபதிகள், குற்ற வழக்கு விசாரணைக்கு காலக்கெடு விதிக்க தேவையில்லை. மனுதாரர் தனது கோரிக்கைக்கு ஆதாரமாக எந்த ஆவணங்களையும் தாக்கல் செய்யவில்லை.
எனவே மனுதாரரின் மனுவை உள்துறை செயலர் பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.