Last Updated : 08 Dec, 2020 03:35 PM

 

Published : 08 Dec 2020 03:35 PM
Last Updated : 08 Dec 2020 03:35 PM

ராமநாதபுரம் நிதி நிறுவன மோசடி வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்: பொருளாதார குற்றப்பிரிவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

ராமநாதபுரம் நிதி நிறுவன மோசடி வழக்கில் விரைவில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய பொருளாதார குற்றப்பிரிவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த சஞ்சீவிகுமார், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

ராமநாதபுரத்தில் நீதிமணி, ஆனந்த் ஆகியோர் நிதி நிறுவனம் நடத்தினர். இந்த நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் ஒரு ஆண்டில் இரட்டிப்பு பணம் தருவதாக கூறினர். இதையடுத்து பலர் நிதி நிறுவனத்தின் பணம் முதலீடு செய்தனர். அதற்கு காசோலை வழங்கினர். ஒரு ஆண்டு முடிந்ததும் காசோலையை வங்கியில் கொடுத்து பணம் வாங்கிக் கொள்ளலாம் என்றனர்.

இதனிடையே நிதி நிறுவனம் நடத்தி பலரை ஏமாற்றியதாக நீதிமணி, மேனகா, ஆனந்த் ஆகியோர் மீது ராமநாதபுரம் பஜார் போலீஸார், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

தற்போது இந்த வழக்கை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கை ராமநாதபுரம் டிஎஸ்பி, காவல் ஆய்வாளர் ஆகியோர் சரியாக விசாரிக்கவில்லை. எனவே வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றவும், விசாரணையை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், நிதி நிறுவன மோசடி தொடர்பாக 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்களின் அசையும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அசையா சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார். சிபிஐ தரப்பில், சிபிஐயில் அதிக வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றினால் வேலைப்பளு அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், சிபிஐக்கு அதிகாரிகள் எவ்வாறு தேர்வு செய்யப்படுகின்றனர் என்றனர்.

அதற்கு மத்திய அரசு வழக்கறிஞர், மத்திய பணியாளர் தேர்வாணையம் மூலம் சிபிஐக்கு பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர் என்றார்.
இதையடுத்து, கடந்த 20 ஆண்டுகளில் சிபிஐக்கு எத்தனை வழக்குகள் மாற்றப்பட்டுள்ளது? இதில் எத்தனை வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு எடுத்தது? சிபிஐ வழக்குகளில் எத்தனை வழக்குகளில் குற்றவாளிகள் தண்டனை பெற்றுள்ளனர்? எத்தனை வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்?

சிபிஐயில் எத்தனை பேர் பணிபுரிகின்றனர்? சிபிஐக்கு அதிகளவில் ஆட்கள் தேர்வு செய்ய என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது? சிபிஐ வழக்குகளில் வங்கி ஊழலை விசாரிக்க சிஏ, ஐசிடயிள்யூஏ, ஏசிஎஸ் பிரிவுகள் பயன்படுத்தப்படுகிறதா? சிபிஐக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது? என்பது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்.

ராமநாதபுரம் நிதி நிறுவன மோசடி வழக்கில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் விசாணையை விரைவில் முடித்து நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை டிச.14-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x