

சுவர் இடிந்து விழுந்து இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (டிச.8) வெளியிட்ட அறிவிப்பு:
"திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், தொப்பம்பட்டி கிராமத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த தொடர் மழையின் காரணமாக இன்று (டிச.8) அதிகாலை தனியார் பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி செல்வகுமார் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.
சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த செல்வகுமாரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த செல்வகுமாரின் குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாய் மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்".
இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.