Published : 08 Dec 2020 01:38 PM
Last Updated : 08 Dec 2020 01:38 PM

ரஜினி, கமல் அரசியல் குறித்த விவாதங்களில் சிவாஜி கணேசனை ஒப்பிட்டு களங்கப்படுத்துவதா?- காங்கிரஸ் கேள்வி

சென்னை

ரஜினி, கமல் அரசியல் குறித்த விவாதங்களில் தொலைக்காட்சி ஊடகங்கள், நடிகர் சிவாஜி கணேசனை தேவையில்லாமல் மேற்கோள்காட்டி அவரைப்பற்றிய தவறான பிம்பத்தை ஏற்படுத்துவது வருத்தம் அளிக்கிறது, அதை தவிர்க்கவேண்டும் என காங்கிரஸ் கட்சியின் கலைப்பிரிவு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கலைப்பிரிவு, தலைவர் சந்திரசேகரன் இன்று வெளியிட்ட அறிக்கை:

“மதிப்பிற்குரிய பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி ஊடக நண்பர்களுக்கு .வேண்டுகோள்,

சமீப காலங்களில், தொலைக்காட்சி விவாதங்களில் அல்லது பத்திரிகை கட்டுரைகளில், நடிகர்களின் அரசியல் பிரவேசம் பற்றி, அது கமலஹாசனாக இருந்தாலும், ரஜினிகாந்தாக இருந்தாலும். அவர்களை எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி ஆகியோரோடு ஒப்பிட்டு எழுதுவது அல்லது விவாதிப்பது வாடிக்கையாகிவிட்டது..

குறிப்பாக, தொலைக்காட்சி விவாதங்களில். ஒரு கட்சியின் பிரதிநிதி கலந்துகொள்ளாதபோது. அந்தக் கட்சியைப் பற்றியும். அந்தக் கட்சியின் தலைமை பற்றியும் விமர்சிப்பதைத் தவிர்க்கச்சொல்லி விவாதத்தில் பங்கேற்பவர்களிடம். நெறியாளரே குறிப்பிடுவது வழக்கம்.

ஆனால். நடிகர்திலகம் சிவாஜி பற்றி விவாதிக்கும்போது மட்டும். நடிகர்திலகம் சிவாஜி தரப்பு பிரதிநிதியாக யாரும் இல்லாத நிலையிலும், எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் நடிகர்திலகத்தை விமர்சிக்க அனுமதிப்பது ஏந்தவிதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.

நடிகர் திலகம் சிவாஜியின் அரசியல் பக்கங்களில் சிலவற்றை மட்டும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

* எம்.ஜி.ஆர், தான் முதல்வர் ஆகவேண்டும் என்பதற்காகவே கட்சி தொடங்கி மக்களை சந்தித்தார். சிவாஜியோ, 1989 தேர்தலில் எம்.ஜி.ஆர் மனைவி முதல்வராக வேண்டும் என்று மக்களை சந்தித்தார். அந்தத் தேர்தலில், அதிமுகவின் ஒரு அணிக்கு தலைவரான எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகிதான் தோற்றாரே தவிர, இதில் சிவாஜி எங்கு தோற்றார் என தெரியவில்லை.

* அதேபோல. அரசியலைப் பொருத்தவரை, நடிகர் திலகம் சிவாஜி தனக்கு பதவி பெற்றுக்கொள்ளவேண்டும் என்று எப்போதுமே விரும்பியதில்லை.

* திரைப்படமே பார்க்க விரும்பாத தந்தை பெரியாரால் சிவாஜி பட்டம் பெற்று, அண்ணாவால் அரவணைக்கப்பட்ட நிலையில். சிவாஜி நினைத்திருந்தால்,, அண்ணாவுடன் அனுசரித்து நின்றிருந்தால்., பல பதவிகளை அடைந்திருக்கமுடியும். ஆனால், கொள்கை ரீதியாக. காமராஜரைப் பின்தொடர்ந்து, தலைவராக ஏற்றுக்கொண்டு. தன் இறுதிக் காலம் வரை காமராஜர் புகழ்பாடி மறைந்தார் நடிகர் திலகம் சிவாஜி என்பதுதான் வரலாறு

* முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியில். பிரதிபலன் எதிர்பாராமல் உழைத்ததோடு., பலரை சட்டமன்ற., நாடாளுமன்ற உறுப்பினர்களாக ஆக்கிய பெருமை நடிகர் திலகம் சிவாஜிக்கு உண்டு.

* குறிப்பாக., 1984 ஆம் ஆண்டு நடிகர் திலகத்தின் மன்றத்துக்கு ஒதுக்கப்பட்ட 5 பாராளுமன்ற மற்றும் 6 சட்டமன்ற தொகுதிகள் அனைத்திலும் 100 சதவிகித வெற்றி கிடைத்தது.

* காங்கிரஸ் கட்சியில் ராஜ்யசபை உறுப்பினராக இரண்டரை ஆண்டு காலம் பதவி வகித்தபோது., எம்.பி.க்களுக்கான போக்குவரத்து மற்ற சலுகைகளைப் பெற்றுக்கொள்ளாதவர்.

*பல தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக பிரச்சாரம் செய்தவர், கட்சியின் பிரச்சாரக் கூட்டங்களுக்கு தன் சொந்த செலவில் சென்று வந்தவர்

* அரசியல் கட்சி தொடங்கினாலும் மக்களிடம் வசூலிக்காமல், தன் சொந்த பணத்தையே செலவிட்டவர்.

* மத்தியில் ஆண்ட காங்கிரசின் பிரதமர் வரை நேரடியாகத் தொடர்பு உண்டு என்றாலும் அதன்மூலம் எந்த ஊழலும் செய்ய நினைக்காதவர். ஏன், பெட்ரோல் பங்க். கல்லூரி என்று கூட கட்சியைவைத்து, ஆட்சியை வைத்து தனக்கென பலனடைய நினைக்காதவர்.

* நான் இங்கு குறிப்பிட்டவை மிகச்சிலதான். திரையுலகில் இருந்தபோதும், அரசியலில் ஈடுபட்டபோதும் விளம்பரமில்லாமல் சிவாஜி செய்த நன்கொடைகளை மறைத்து. அவருடைய நேர்மறைப் (Positive) பக்கங்களை விடுத்து. எதிர்மறை (Negative) செய்திகளாகவே அவர் வாழ்ந்த காலத்தில் பரப்பிக்கொண்டிருந்தவர்கள், அவர் மறைந்த பின்னரும் தொடர்வது வேjதனைக்குரிய ஒன்றாகும்.

* திரையில் நடிகர் திலகமாக ஜொலித்த சிவாஜிக்கு., அரசியலில் நடிக்கத் தெரியவில்லை என்பதுதான் உண்மை.

* இனியாகிலும்,, திரையுலகிலும்., அரசியலிலும்., தன் மனசாட்சிப்படி. நேர்மையாக நடந்துகொண்ட நடிகர்திலகம் சிவாஜி அவர்களைப் பற்றி தவறான பிம்பத்தை ஏற்படுத்திடும் வகையில், அவருடைய நேர்மை அரசியலை. தூய்மை அரசியலை விவாதப் பொருளாக்கி. களங்கப்படுத்தவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்”.

இவ்வாறு சந்திரசேகரன் வேண்டுகோள் வைத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x