Last Updated : 08 Dec, 2020 12:27 PM

 

Published : 08 Dec 2020 12:27 PM
Last Updated : 08 Dec 2020 12:27 PM

மழை சேதப் பகுதிகளைப் பார்வையிட கடலூர் மாவட்டத்துக்கு முதல்வர் இன்று வருகை: முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர்கள் ஆய்வு

சிதம்பரத்தில் மழையால் இளமையாக்கினார் குளம் சுவர் இடிந்த இடத்தில் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு வருவதை அமைச்சர்கள் சண்முகம், சம்பத், தங்கமணி, எம்எல்ஏ பாண்டியன் ஆகியோர் பார்வையிட்டனர்.

கடலூர்

கடலூர் மாவட்டத்தில் மழை சேதப் பகுதிகளை முதல்வர் பழனிசாமி இன்று பார்வையிடுகிறார். அதற்கான முன்னேற்பாடுகளை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.

புரெவி புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த 6 நாட்களாக கனமழை பெய்தது. இதனால் தாழ்வான குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீர் புகுந்தது. விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கின. பொதுமக்கள் பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். மாவட்டக் கண்காணிப்பு அதிகாரி ககன்தீப்சிங் பேடி தலைமையில் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி மற்றும் உயரதிகாரிகள் கொண்ட குழுவினர் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உணவு உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய வசதிகளும் கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், இன்று (டிச.8) பிற்பகல் 2 மணியளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடலூர் மாவட்டத்தில் கடலூர் அருகே உள்ள ஆலப்பாக்கம் அருகே சேதமடைந்த தேசிய நெடுஞ்சாலைகளைப் பார்வையிடுகிறார். சிதம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட இளமையாக்கினர் கோயில் குளம் சுவர் விழுந்ததைத் தொடர்ந்து மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு இருப்பதையும், சேதமடைந்த பகுதிகளையும் பார்வையிடுகிறார்.

தொடர்ந்து, சாலியன்தோப்பு கிராமத்தில் மழையால் சேதமடைந்த வேளாண் பயிர்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். பின்னர் வல்லம்படுகை கிராமத்தில் புயலால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நிவாரண உதவி வழங்குகிறார்.

இந்த நிலையில், இன்று காலை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத், மின்துறை அமைச்சர் தங்கமணி, எம்எல்ஏ பாண்டியன் ஆகியோர், முதல்வர் பார்வையிடும் ஆலப்பாக்கம், சிதம்பரம், சாலியன்தோப்பு, வல்லம்படுகை ஆகிய இடங்களில் உள்ள முன்னேற்பாடுகள் குறித்துப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி, நகராட்சி மண்டல இயக்குநர் முஜிபூர் ரஹ்மான், சிதம்பரம் நகராட்சி ஆணையாளர் அஜிதா பர்வீன், பொறியாளர் மகாராஜன், டிஎஸ்பி லாமேக் மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x